Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » மதுபானம் குர்ஆனிலும் பைபிளிலும் (பாகம்-2)

மதுபானம் குர்ஆனிலும் பைபிளிலும் (பாகம்-2)

Article திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் – ஓர் ஒப்பீடு என்ற தலைப்பில் இஸ்லாம் கல்வி தளத்தில் தொடர் கட்டுரைகள் வெளியாகியிருந்தன. அதில் குர்ஆன் இறைவேதம் என்பதையும் பைபிள் மனிதக் கரங்களால் மாசுபட்ட காரணத்தால் அதில் ஏற்பட்ட முரண்பாடுகளையும் தெளிவாக விளக்கியிருந்தோம். அவ்வாறு வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு நியாயமான மறுப்பைத் தரவியலாத கிறித்தவ சபை சில குர்ஆன் வசனங்களை அடிப்படையாக வைத்து குற்றச் சாட்டுகளைக் கூறியுள்ளது. குர்ஆன் மீது வைக்கப்படும் ஒவ்வொரு விமர்சனங்களுக்கும் ஒரு முஸ்லிமால் நியாயமான முறையில் உறுதியான சான்றுகளுடன் பதிலளிக்க இயலும். இது ஒரு முஸ்லிமுடைய திறமையின் காரணத்தால் அல்ல. மாறாக அது குர்ஆனின் தனித்தன்மை ஆகும்.

இத்தொடரின் முதல் பகுதியை படிக்க இங்கு சொடுக்கவும்.

குடித்து போதை கொண்டு, நமாஜ் செய்யும் போது உளரும் முஸ்லீம்கள்:

அல்லா மதுபானத்திற்கு அனுமதி அளித்தவுடன் முஸ்லீம்கள் நன்றாக குடிக்க ஆரம்பித்தார்கள். எந்த அளவிற்கு என்றால், நமாஜ் செய்யும் போது, சொல்லப்படும் சூராக்களை குடிமயக்கத்தில் தாறுமாறாக சொல்ல ஆரம்பித்தார்கள். பாவம் அல்லா என்ன செய்வார்?

குர்ஆனில் மதுபானத்தை அல்லாஹ் அனுமதித்ததாகக் கூறும் ஒரு வசனத்தையேனும் இவர்களால் காட்ட இயலுமா? கிறித்தவர்களே! இதனை உங்களுக்கு சாவாலாகவே விடுகிறோம்.

இவர்கள் விமர்சித்த திருக்குர்ஆனின் 4: 43 ஆம் வசனம் நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்;. (அல்குர்ஆன் 4:43)

மேற்கண்ட வசனத்துக்கும் எதிர்மறையான விளக்கத்தை அளிக்க முயன்றுள்ளனர்.

முஸ்லீம்களே குடியுங்கள் பரவாயில்லை, ஆனால், குடித்து நமாஜ் செய்யும் போது, போதையில் உளரும் அளவிற்கு குடித்துவிட்டால், தொழுகைக்கு வரவேண்டாம் என்று அல்லா வசனம் இறக்கினார். முஸ்லீம்களின் “குடியை நிறுத்தக்கூடாது என்பதில்” அல்லா எவ்வளவு அக்கரை உள்ளவராக இருக்கிறார் பாருங்கள்

என்று உளறிக் கொட்டியுள்ளனர்.

கிறித்தவர்களைப் போன்று வாரம் ஒரு முறை மட்டும் கோயிலுக்குச் சென்று பாட்டுப்பாடி ஆராதனை செய்பவர்களல்ல முஸ்லிம்கள். ஒவ்வொரு நாளும் ஜந்து வேளை தன்னைப் படைத்த இறைவனாகிய அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளான் முஸ்லிம். தொழுகையின் மூலம் தன் இறைவனுடன் தொடர்பு கொள்கிறான் முஸ்லிம். அந்தத் தொழுகையோ அவனைப் பாவங்களிலிருந்து பரிசுத்தப் படுத்துகிறது. அதில் அவன் தன் இறைவனை நினைவு கூறும்போது முழு ஒர்மையுடன் தன் இறைவனுக்கு முன் நிற்க வேண்டும். மது பானத்தின் தீங்கைக் குறித்துக் குர்ஆன் விளக்கிய போது பலரும் குடியை விட்டு விட்டனர். எனினும் சிலர் குடித்து விட்டுத் தொழுகையில் கலந்து கொண்டனர். இவர்களைக் குறித்தே இவ்வசனம் இறங்கியது.

பாருங்கள் நுண்ணறிவாளனாகிய அல்லாஹ்வின் இந்த இரண்டாம் கட்ட சீர்திருத்தம் எவ்வளவு அற்புதமானது. பொதுவாக குடிப்பழக்கம் உடைய ஒருவர் குடித்து விட்டால் போதை தெளிவதற்கு பல மணி நேரங்கள் ஆகும். ஒரு முஸ்லிமைப் பொறுத்த வரை ஜந்து வேளை தொழுகைகள் அதில் நான்கு வேளைத் தொழுகைகள் அடுத்தடுத்து வருகின்றன! போதையில் தொழக் கூடாது என்ற வசனம் இறங்கியவுடன் பெரும்பாலானவர்களும் குடிப்பதைக் கைவிட்டுவிட்ட அற்புதம் நடந்தேறியது! இதற்குப் பின்னர் தான் முழுமையாக மது பானம் தடை செய்யப்பட்டு வசனங்கள் இறங்கின.

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 5:90)

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்குர்ஆன் 5:91)

மேற்கண்ட வசனங்கள் இறங்கிய போது மதுபானம் முற்றிலும் கைவிடப்பட்ட மிகப் பெரும் புரட்சி நடந்தேறியது. மதுவை ஒழிப்பதற்கு எத்தனையோ திட்டங்கள் உலகியல் வாதிகளால் கையாளப்பட்டன. மதுவினால் சீரழிவுக்குள்ளான குடும்பங்களின் கதைகளை நாம் வாசித்திருக்கிறோம். கண்டு அனுபவித்திருக்கிறோம். அனால் எந்த உலகியல் தத்துவங்களாலும் சாதிக்க இயலாத சாதனையை இஸ்லாம் சாதித்துள்ளது. காரணம் அது கருணையாளனாகிய அல்லாஹ்வின் மார்க்கமாகும். குர்ஆன் அவன் இறக்கிய வசனங்களாகும். குர்ஆன் அருளப்பட்ட காலத்திலிருந்து அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று குடியைப் புறக்கணித்தனர். இதனால் பாதுகாக்கப் பட்ட உயிர்கள், சீர் பெற்ற குடும்பங்கள், அமைதி பெற்ற சமூகம் இதனை சித்தித்துப் பாருங்கள்! இந்நேரத்தில் அல்லாஹ் தன் அடியார்கள் மீது புரிந்ந அளப்பரிய கருணையை நினைவு கூறவேண்டும்.

நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்;. அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்;. அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்;. இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார்;. மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் – அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர். (3:164)

அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்!

குடிப்பது ஷைத்தானின் செயல் என்று குர்‍ஆன் 5:90 யில் சொல்லும் அல்லாவிற்கு இந்த செயல் ஷைத்தானின் செயல் என்று ஆரம்பத்தில் தெரியவில்லையா?

என்ற விமர்சனம் குறித்து..

அல்லாஹ் தன் அடியார்களைப் பற்றி நன்கறிந்தவன். ஒவ்வொரு காலகட்டத்திலும் தன் அடியார்களுக்கு எது தேவை எது தேவையற்றது என்பதனை அவனே நன்கறிவான். அதற்கேற்ப அவன் சட்டங்களை இறக்குவான். தேவைக்கு ஏற்ப சட்டங்களை மாற்றியமைப்பான். இது அவனது அதிகாரத்தில் உள்ளதாகும். இதில் கேள்வி எழுப்ப எவருக்கும் உரிமை இல்லை. உதாரணமாக மனித சமூகத்தின் ஆரம்ப கட்டத்தில் சகோதரனும் சகோதரியும் மணம் முடித்தே சந்ததிகளைப் பெருக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது. பின்னர் மனித சமூகம் பல்கிப் பெருகிய கட்டத்தில் சகோதர சகோதரிகளுக்கிடையில் மணம் புரிவது தடுக்கப்பட்டது. இது போன்று ஒவ்வொரு சமூகத்துக்கும் தேவையான கால கட்டங்களில் எதனை சட்டமாக்க வேண்டும் என்பதனை நன்கறிந்தவன் இறைவன் ஒருவனே. ஒரு சமூகத்தின் படிப்படியான சீர்திருத்தத்தை விளக்கிக் காட்டும் வேதநூல் குர்ஆன். முன்னால் அனுமதிக்கப்பட்டு பின்னால் மாற்றப்பட்ட சம்பவங்களை விவரிக்கும் வசனங்களும் அதில் உள்ளன. அது ஒரு சமூகம் எவ்வாறு வார்த்தெடுக்கப்பட்டது என்பதற்கான சான்றுகளாகும். அதனைப் படிப்பவர்களுக்கு ஏராளம் படிப்பினைகளை அது வழங்குகிறது. இதுவும் இது அல்லாஹ்வின் வேதம் என்பதற்கான சான்றாகும்.

ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா? (அல்குர்ஆன் 2:106)

நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா? (அல்குர்ஆன் 2:107)

(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) “நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்” என்று அவர்கள் கூறுகிறார்கள்; எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 16:101)

எப்போது மதுபானம் குறித்த தடை வந்து விட்டதோ அதிலிருந்து பூரணமான மதுவிலக்கு உடனடியாக செயல்படுத்தப்பட்டது. மதுபானம் குறித்த பழைய சட்டங்கள் ரத்தாகிவிடும். வெங்காயம் குறித்த இவர்களது விமர்சனமும் இவர்களின் அறியாமையை வெளிப்படுத்துகிறது. மதுவை அனுமதித்துவிட்டு வெங்காயம் உண்பதை (தொழுகைக்கு வரும்போது) தடை செய்திருந்தால் இவர்களின் கூற்றை நியாயம் என்று கூறலாம். பள்ளி வாசலுக்கு வரும்போது வெங்காயம் உண்பதை வெறுக்கத் தக்கதாக நபி (ஸல்) அவர்கள் ஆக்கினார்கள். காரணம் அது துர்வாடை மிக்கது. மதுபானம் அருந்துவது விலக்கப்பட்டது! பள்ளிவாசலுக்கு வரும்போது வெங்காயம் உண்பது வெறுக்கத் தக்கது. மது வாடையை விட வெங்காய வாடை தீயது என்று எங்கே கூறப்பட்டுள்ளது. இன்று பள்ளி வாலுக்கு வரும் எந்த முஸ்லிமும் மதுபானம் அருந்துவதில்லை. ஏதேனும் பள்ளிவாசலுக்குச் சென்று அங்கு தொழுகைக்காக வரும் முஸ்லிம்களை இவர்கள் கவனிக்கட்டும். கிறித்தவ ஆலயங்களில் எந்த மது அருந்திவிட்டு ஆண்கள் வருவது போல் அரை குறை ஆடையுடன் பெண்கள் வருவது போல் முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்கு வருவதில்லை. நம் பாவங்களுக்காக தானே சாபமாகி சிலுவையில் மரித்தார் என்று பாவம் செய்ய உரிமம் வழங்கும்
பகட்டுக் கொள்கையைக் கொண்டவர்களல்ல முஸ்லிம்கள்.

அல்லாஹ் அறியாதவனா என்று கேள்வி எழுப்பும் சபையினரே! பவுல் என் தனி மனிதரின் வார்த்தைகளைக் கேட்டு கர்த்தரின் எத்தனையோ கட்டளைகளைப் புறக்கணித்து வாழும் உங்களுக்கு இதனைக் கூற என்ன அருகதை இருக்கிறது? வேதம் என்று நீங்கள் ஏந்தி நடக்கும் பைபிளின் பின்வரும் முரண்பட்ட கொள்கைகளைச் சற்று கவனித்துப் பாருங்களேன்.

நியாயப் பிரமாணம்
பழய ஏற்பாடு கூறுகிறது
உபாகமம் 27 : 26. இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக: ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

இயேசு கூறியதாக மத்தேயு எழுதியுள்ளார்
மத்தேயு 5: 17,18. நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்: அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நியாயப் பிரமாணத்தின் படி நடவாதவன் சபிக்கப்பட்டவன். வானம் பூமி அழிந்தாலும் நியாயப் பிரமாணத்தின் சிறு எழுத்து போலும் அழியாது என்று இயேசு கூறுகிறார். இனி இதற்கு முற்றிலும் முரண்பட்ட பவுலின் கூற்றைப் பார்ப்போம்.

நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்: நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே. (கலாத்தியர் 3: 10, 11)

நியாயப் பிரமாண வார்த்தைகளின் படி நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்று கூறும் அதே பைபிள் தான் நியாயப் பிரமாணத்தின் படி நடப்பவனையும் சபித்துள்ளது. நியாயப் பிரமாணத்தை நிலை நாட்டவேண்டும் என்று கூறிய அதே பைபிள்தான் அதனை நிலை நாட்ட வேண்டிய அவசியம் இல்லை என்கிறது.

விருத்தசேதனம்
ஆதியாகமம் 17 : 10. எனக்கும் உங்களுக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ளவேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால் உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்

ஆதியாகமம் 17:14. நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால் அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.

ஆதியாகமம் 17 : 23. அப்பொழுது ஆபிரகாம் தன் குமாரனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டிலே பிறந்த யாவரையும், தான் பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து, தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்நாளிலேதானே விருத்தசேதனம் பண்ணினான்.

ஆதியாகமம் 34 : 14. விருத்தசேதனமில்லாத புருஷனுக்கு நாங்கள் எங்கள் சகோதரியைக் கொடுக்கலாகாது: அது எங்களுக்கு நிந்தையாயிருக்கும்.

விருத்த சேதனம் இயேசுவுக்கும்
லூக்கா 2 : 21. பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.

விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும், அவ்வாறு செய்யாமை இறைவனுக்கு மாறு செய்வதாகும், அவர்கள் அழிவர், ஆபிரகாம் முதற் கொண்டு இயேசு வரை அனைவருக்கும் அது செய்யப்பட்டது என்று கூறும் அதே பைபிள்தான் அதற்கு முரண்பட்ட பவலின் பின் வரும் வரிகளையும் உள்ளடக்கியுள்ளது.

கலாத்தியர் 5 : 2. இதோ, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒருபிரயோஜனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இவ்வாறு முரண்பாடுகளின் மொத்தக் குத்தகையையும் தன்னகத்தே கொண்டவர்கள் குர்ஆனில் முரண்பாடு கற்பிக்கிறார்கள் போலும்.

இயேசு கானா கல்யாண விருந்தில் தயார் செய்தது எந்த வகை மது பானம் என்பதையும் அல்லாஹ்வின் மகத்தான ஞானத்தை விளக்கும் குர்ஆனை உண்மைப் படுத்தும் சம்பவங்களையும் இன்ஷா அல்லாஹ் மூன்றாம் பகுதியில் விளக்குவோம்.

இறைவன் நாடினால் தொடரும்..

One comment

  1. // அல்லா மதுபானத்திற்கு அனுமதி அளித்தவுடன் முஸ்லீம்கள் நன்றாக குடிக்க ஆரம்பித்தார்கள். எந்த அளவிற்கு என்றால், நமாஜ் செய்யும் போது, சொல்லப்படும் சூராக்களை குடிமயக்கத்தில் தாறுமாறாக சொல்ல ஆரம்பித்தார்கள். பாவம் அல்லா என்ன செய்வார்? //

    கொஞ்சம் அரபியர்களின் வரலாறுகளை கிருஸ்தவர்கள் பார்க்கவில்லை போலும் என்னமோ இதற்குமுன்னர் மது என்றால் என்ன? ஒன்றுமே ! தெரியாத அப்பாவியாக வாயில் விரலை வைத்தால் கடிக்கத்தெரியாதவர்களாக இருந்த அரபு மக்களுக்கு அல்லாஹ் வந்து தான் குடியை காண்பித்தது போலும். அல்லது ஒவ்வொன்றுக்கும் அனுமதி பெற்றுக்கொண்டு அதற்க்கு தகுந்தவாறு அல்லாஹ் ஓகே சொன்ன மாதிரி விமர்சித்த அறியா சிலுவை சபையே ! ஒரு மனிதனின் மூழ்கி கிடந்த கெட்ட பழக்கத்தை திடீர் என்று விட்டால் அவனுக்கு உடல் ஆரோக்கியம் கெடும் எதிர் வினை வரும் என்பது படைத்தவனுக்கு தெரியும். படைக்கபட்டவருக்கு தெரியாது. மருத்துவரை போய் கேழும். படைக்கப்பட்டவர் என்ன செய்வார் ? பாவம். திரித்துவம் என்ற ஒன்று உண்மை என்றால் நான்குதுவமும் யாராலும் உருவாக்கமுடியும் உங்களைபோலவே ! அது எப்படி என்று வரிந்து கட்டிக்கொண்டு வரமுடியுமா ?
    மா சலாம்.
    அப்துல் அசீஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *