Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் » பாவாத மலையும்… இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும்… – 02

பாவாத மலையும்… இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும்… – 02

பாவாத மலையும்… இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும்… – 01

பாவாத மலையும் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும்

முதல் மனிதர் வாழ்ந்த பிரதேசம் எது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளது. இஸ்லாமிய அறிஞர்கள் நூற்கள் பலவும் முதல் மனிதர் இந்து பிரதேசத்தில் செரண்டிப் எனும் பகுதியில் ஒரு மலையில் முதலில் இறக்கப்பட்டார் என்ற கருத்தை முன்வைப்பதுடன் அவர் மற்றும் அவரது சந்ததிகள் இந்தியாவில் பல பகுதிகளில் வசித்துள்ளார்கள் என்ற அனுமானத்தைத் தெரிவிக்கின்றன. இவை வெறும் அனுமானம் மட்டுமே! ஆதாரங்கள் இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகின்றேன்.

முதல் மனிதர் இறக்கப்பட்ட பிரதேசம்:
முதல் மனிதர் சுவனத்தில் இருந்து இறங்கிய போது அவர் நிர்வாணமாக இறங்கியதால் சுவனத்து இலைகளால் தன்னை மறைத்திருந்தார். இந்த சுவனத்து இலைகள் பட்ட தாவரங்கள் நறுமணம் மிக்கதாக மாறியதாக சில கருத்துக்கள் அனுமானம் கூறுகின்றன. பாவாத மலை அமைந்துள்ள பிரதேசமும் இலங்கையும் வாசனைத் திரவியங்கள் மிகுந்த மரங்கள் நிறைந்த நிலப்பரப்பாக அமைந்துள்ளது.

ஆதம் நபி பூமிக்கு இறக்கப்படும் போது அங்கிருந்து மாணிக்கக் கற்களை எடுத்து வந்ததாகவும் அவர் இறக்கப்பட்ட இடம் மாணிக்கக் கற்கள் நிறைந்த பிரதேசமாக அமைந்ததாகவும் பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். பாவாத மலை அமைந்துள்ள சபரகமுவ வலையத்தில்தான் இலங்கையில் அதிகமான மாணிக்கக் கற்கள் உள்ள இரத்தினபுரி பிரதேசம் அமைந்துள்ளது. இலங்கையை அரபிகள் ‘ஜஸீரது யஃகூத்’ – மாணிக்கத் தீவு என்றே அழைத்து வந்தனர்.

இலங்கையும் பண்டைய குடியிருப்பும்:
முதல் மனிதர் இலங்கையில் இறக்கப் பட்டிருந்தால் பண்டைக் காலம் தொட்டே இலங்கையில் மனிதர்கள் வாழ்ந்தற்கான தடையங்கள் இருக்க வேண்டும். அதற்கான சான்றுகள் உள்ளதா? என்ற கேள்வி எழுவது நியாயமானதே. இந்தக் கோணத்தில் ஆராய்ந்து பார்த்தாலும் பாவாத மலை அமைந்துள்ள பகுதியில் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் பலாங்கொட பிரதேசத்தில் மனித இனம் வாழ்ந்ததற் கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில் பலாங்கொட மனிதன் என்றும் பலாங்கொட நாகரீகம் என்றும் அழைக்கப்படும் பண்டைய இலங்கை பற்றிய குறிப்புக்களை ஆய்வுகளிலும் இணையதளங்களிலும் காணலாம்.

இது தொடர்பிலான சில தகவல்களைப் பார்ப்பதற்கு முன்னர் முதல் மனிதன் மற்றும் ஆதி மனிதன் பற்றிய சில தவறான அனுமானங்கள் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும்.

மனித இனம் பற்றி ஆராய்பவர்கள் மத நம்பிக்கை அற்றவர்கள் என்பதால் வெறும் யு+கங்களை யும் அனுமானங்களையும் மட்டும் மையமாக வைத்து தமது கருத்துக்களை முன்வைக்கின்றனர். ஆனால், அல் குர்ஆன் அதற்கு மாற்றமான சில அடிப்படை களைத் தருகின்றது.

  • முதல் மனிதன் எந்த அறிவும் அற்றவனாக இருந்தான்.
  • அனைத்தையும் இயற்கையிடம் இருந்தே அவன் கற்றுக் கொண்டான்.
  • ஆரம்பத்தில் அவனிடம் மொழி அறிவு இருக்கவில்லை.
  • அவன் போகப் போகத்தான் கூட்டாக ஒரு இடத்தில் தங்கி வாழும் பழக்கத்தையும் நாகரிகத்தையும் கற்றுக் கொண்டான்.
  • நெருப்பு பற்றிய அறிவு அவனிடம் ஆரம்பத்தில் இருக்கவில்லை.
  • விவசாயம், கால்நடை வளர்ப்பு என்பவற்றை மிக மிகப் பிற்பட்ட காலத்தில்தான் அவன் கையாண்டான்.

மேற்போன்ற முடிவுகளை இவர்கள் கொண்டுள்ளனர்.

ஆனால், முதல் மனிதனுக்கு மொழியறிவும் இருந்தது. பொருட்கள் பற்றிய அறிவும் அவனுக்கு வழங்கப்பட்டது என குர்ஆன் கூறுகின்றது.

இன்னும், அவன் ஆதமுக்கு அனைத்துப் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி, “நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்” என்று கூறினான்.

அவர்கள், (இரட்சகனே!) “நீ தூய்மை யானவன்’ நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர வேறறிவு எங்களுக்கில்லை. நிச்சயமாக நீயே நன்கறிந்தவனும்’ ஞானமிக்கவனுமாவாய்” எனக் கூறினார்கள்.

“ஆதமே! இவற்றின் பெயர்களை அவர் களுக்கு அறிவிப்பீராக!” என (அல்லாஹ்) கூறினான். அவர் அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவித்த போது, ‘நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் நன்கறிந்தவன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துபவற்றையும் மறைத்துக் கொண்டிருப்ப வற்றையும் நான் நன்கறிவேன் என்றும் உங்களுக்குக் கூற வில்லையா? என (அல்லாஹ்) கேட்டான்.

பின்னர் நாம் வானவர்களிடம், “ஆதமுக்கு சுஜூது செய்யுங்கள்” என்று கூறிய போது, இப்லீஸைத் தவிர அவர்கள் (அனைவரும்) சுஜூது செய்தனர். அவன் மறுத்தான், பெருமையும் கொண்டான். அவன் நிராகரிப்பாளர்களில் ஆகிவிட்டான்.” (2:31-33)

முதல் மனிதன் பூமிக்கு அனுப்பப் படும் போது எந்த வழிகாட்டலும் இல்லாமல் அனுப்பப்படவில்லை. அவனுக்கு தெய்வீக வழிகாட்டல் வழங்கப்பட்டது என குர்ஆன் குறிப்பிடுகின்றது.

“இதன்பின் ஷைத்தான், அவ்விருவரையும் அதிலிருந்து தடம்புறழச் செய்து, அவ்விருவருமிருந்த (இடத்)தை விட்டும் அவர்களை வெளியேற்றினான். இன்னும், ‘நீங்கள் இங்கிருந்து இறங்குங்கள். உங்களில் சிலர் சிலருக்குப் பகைவர்களாவீர்கள். உங்களுக்குப் பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வாழ்க்கை வசதியும் உள்ளன” என்று நாம் கூறினோம்.

பின்னர் ஆதம் தனது இரட்சகனிடமிருந்து சில வார்த்தைகளைப் பெற்று (அதன் மூலம் மன்னிப்பும் கேட்டு)க் கொண்டார். அதனால் அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையவன்.

நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்கிவிடுங்கள்! என்னிடமிருந்து நிச்சயமாக உங்களுக்கு நேர்வழி வரும். அப்போது என்னுடைய நேர்வழியை யார் பின்பற்றுகின்றார்களோ அவர் களுக்கு யாதொரு பயமும் இல்லை, அவர்கள் துக்கப் படவும் மாட்டார்கள் என்று கூறினோம்.

எவர்கள் நிராகரித்து எமது அத்தாட் சிகளையும் பொய்ப்பிக்கின்றார்களோ அவர்கள்தாம் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.” (2:36-39)

முதல் மனிதனின் பிள்ளைகள் ஆரம்ப காலத்திலேயே விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டனர் என குர்ஆன் கூறுகின்றது.

குர்ஆனில் ஆதம் நபியின் இரு பிள்ளைகள் பற்றிய ஒரு சம்பவம் இப்படிக் கூறப்படுகின்றது.

(நபியே!) ஆதமின் இரு புதல்வர்களின் செய்தியை உண்மையாக அவர்களுக்கு எடுத்துரைப் பீராக! அவ்விருவரும் காணிக்கை நிறைவேற்றிய போது அவ்விருவரில் ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. “நிச்சயமாக நான் உன்னைக் கொலை செய்வேன்” என (காணிக்கை ஏற்றுக் கொள்ளப்படாதவன்) கூறினான். அதற்கு (மற்றவர்), ‘பயபக்தியாளர்களிடமிருந்துதான் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்” எனக் கூறினார்.

என்னைக் கொலை செய்வதற்காக நீ உன் கையை என் பக்கம் நீட்டினாலும் உன்னைக் கொலை செய்வதற்காக எனது கையை உன்பக்கம் நான் நீட்டுபவன் அல்ல. “நிச்சயமாக நான் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வை அஞ்சுகின்றேன்.”

“என் பாவத்தையும் உன் பாவத்தையும் நீ சுமந்து அதனால் நரகவாசிகளில் ஒருவனாக நீ ஆகிவிடுவதையே நிச்சயமாக நான் விரும்புகின்றேன். இதுதான் அநியாயக் காரர்களுக்குரிய கூலியாகும்” (என்றும் கூறினார்.)

“பின்னரும் தன் சகோதரனைக் கொலை செய்ய அவனது உள்ளம் அவனைத் தூண்டவே, அவன் அவனைக் கொலை செய்துவிட்டான். இதனால் அவன் நஷ்ட வாளிகளில் உள்ளவனாக ஆகிவிட்டான்.

தனது சகோதரனின் சடலத்தை எவ்வாறு அடக்கம் செய்வது? என்பதை அவனுக்குக் காண்பிப்பதற்காக, பூமியில் தோண்டிக் காட்டும் ஒரு காகத்தை அல்லாஹ் அனுப்பினான். (இதைக் கண்ணுற்ற) அவன், ‘எனக்கேற்பட்ட கைசேதமே! நான் இக்காகத்தைப் போலாயினும் இருப்பதற்கு இயலாத வனாகிவிட்டேனே! அப்படியிருந்தால் என் சகோதர னுடைய சடலத்தை நான் அடக்கஞ் செய்திருப்பேன்” என்று கூறி, கவலைப்படுவோரில் உள்ளவனாக அவன் ஆகிவிட்டான்.” (5:27-31)

இங்கு இருவரும் காணிக்கை செலுத்திய தாகவும் ஒருவருடைய காணிக்கை ஏற்கப்பட்டதாகவும் மற்றையவரது காணிக்கை ஏற்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. இதில் ஒருவர் விவசாயம் செய்பவராகவும் மற்றையவர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டதாகவும் தப்ஸீர்கள் கூறுகின்றன. (தபரீ)

இந்த சம்பவம் பற்றி விமர்சனம் செய்யும் நாஸ்திகர்கள் முதல் மனிதன் மரணம் பற்றிய அறிவற்றவன். அவன் எப்படி கொலை செய்வான் என்றெல்லாம் கேள்வி எழுப்பி தமது மேதாவித் தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனர். ஆதி மனிதன் மரணத்தை அறியாமலா விலங்குகளைக் கொண்று உண்டு வந்தான் என்று கூட இவர்கள் சிந்திக்கத் திராணியற்றுப் போனார்கள்.

எனவே, ஆதி மனிதன் பல்வேறுபட்ட விடயங்களை அறிந்தே இருந்தான். அவன் இயற்கை யிடம் இருந்தும் சில விடயங்களைக் கற்றுக் கொண்டான் என்பதையும் சேர்த்தே முன்னைய சம்பவம் கூறுகின்றது.

இந்த விபரங்களோடு வரலாற்றுக்கு முற்பட்ட காலகட்டத்தில் குறிப்பாக, பாவாத மலையை அண்டிய பிரதேசங்களில் ஆதிகால மனிதர்கள் வாழ்ந்திருக் கின்றார்களா? என்பது குறித்து ஆய்வு செய்தால் ஆச்சரியப்படத்தக்க தகவல்கள் கிடைக்கின்றன.

இது குறித்துப் பேசும் விக்கீபீடியாவில் பின்வருமாறு கூறப்படுகின்றது.

இற்றைக்கு கிட்டத்தட்ட 300000 முதல் 500000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த “ஓமோ எரெக்டசு” (Homo Erectus) இனம் இலங்கையில் வாழ்ந்தமைக்கான சான்றுகள் காணக் கிடைக்கின்றன. 125000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்கள் இலங்கையில் வாழ்ந்தமைக்கான உறுதியான சான்றுகள் உள்ளன. (Jump up to:2.0 2.1 1. Deraniyagala, Siran U. “Pre- and Protohistoric settlement in Sri Lanka”. XIII U. I. S. P. P. Congress Proceedings- Forli, 8 – 14 September 1996. International Union of Prehistoric and Protohistoric Sciences.)

அடுத்து ஆதிகாலத்திலேயே மனிதன் வேளான்மை செய்துள்ளான். இது பற்றிக் பேசும் போது,

பலாங்கொடை மனிதனே இலங்கையின் நடு மலை நாட்டில் வேட்டையாடுவதை எளிதாக்குவதற்காக மரங்களை எரித்து ஓட்டன் சமவெளியை உருவாக்கினான் எனக் கருதப்படுகிறது. எனினும், ஓட்டன் சமவெளியிற் கண்டெடுக்கப்பட்டனவான பொதுக்காலத்துக்கு 15,000 ஆண்டுகளுக்கு முந்திய புல்லரிசி மற்றும் வாற்கோதுமை என்பன, பலாங்கொடை மனிதன் வேளாண்மையிலும் ஈடுபட்டானெனக் கருதச் செய்கின்றன.(4)

[Jump up↑ Pichumani, K; T S Subramanian, S U Deraniyagala (05 – 18 June 2004). “Prehistoric basis for the rise of civilisation in Sri Lanka and southern India” Frontline 21 (12)]

ஆரம்ப மனிதன் விலங்கு, வேளாண்மையிலும் ஈடுபட்டுள்ளான். அத்துடன் முதல் மனிதர் உலகுக்கு வந்த போது நாயை தனக்குத் தேர்ந்தெடுத்ததாகவும், அதன் தலையைத் தடவியதாகவும் அன்றிலிருந்து நாய் மனித இனத்திற்கு விசுவாசமானதாகவும் குர்ஆன் விளக்கவுரைகள் கூறுகின்றன. இது நேரடியாக குர்ஆனிலோ, ஹதீஸிலோ வராத விளக்கவுரை யாளர்கள் கூறும் செய்தி மட்டுமே! இருப்பினும் ஆதிகால இலங்கை வாழ் மனிதன் பற்றிய அந்தக் கட்டுரை விலங்கு, வேளாண்மை பற்றி இப்படிக் கூறுகின்றது,

நில்கல குகை மற்றும் பெல்லன்பந்தி பலசுச என்னுமிடங்களிற் காணப்பட்ட பொதுக் காலத்துக்கு 4500 ஆண்டுகளுக்கு முந்தியனவான நாய் எலும்புக்கூட்டு எச்சங்கள், பலாங்கொடை மனிதன் வேட்டைக்காக நாய்களைப் பயன்படுத்தினான் என்ற கருத்தை ஏற்படுத்துகின்றன. இலங்கையின் நாயினங்கள் தமக்குப் பொதுவான வரலாற்றுக்கு முந்திய முன்னோரைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. மேலும் காட்டுக்கோழி, பன்றி, நீரெருமை, மாடு போன்றவற்றையும் பலாங்கொடை மனிதன் பழக்கி வளர்த்தான் எனக் கருதப்படுகிறது.(5)

“Deraniyagala, Siran (1992). The Prehistory of Sri Lanka. Colombo: Department of Archaeological Survey. Page. 454. ISBN 955 9159 00 3.”

பலாங்கொட மனிதன் பற்றிய இந்த செய்திகள் இஸ்லாம் கூறும் தகவல்களுடன் ஒத்துச் செல்கின்றது. இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் அம்சங்கள்தான் மிகப் பழமையானது என்பதற் கில்லை. இதைவிடப் பழமையான தொல் பொருட்கள் கண்டெடுக்கப்படலாம்.

அவ்வாறே கண்டெடுக்கப்பட்டதை விட பழமையான பல அம்சங்கள் கண்டெடுக்கப்படாமல் கூட இருக்கலாம். இருப்பினும் இந்த அம்சங்கள் ஒரு உண்மையைச் சொல்கின்றன. சிங்கள இனம் என்ற ஓர் இனம் உருவானதற்கு முன்னரே அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் மனித இனம் வாழ்ந்துள்ளது. எனவே, இலங்கை சிங்கள இனத்துக்குச் சொந்தமான நாடு எனப் பீற்றிக் கொள்வதில் அர்த்தம் இல்லை. ஆதிகாலத்தில் தமிழ் இனத்தவர்கள் இலங்கையை ஆண்டும் உள்ளனர்.

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டே இலங்கையில் மனித இனம் வாழ்ந்துள்ளது. அவர்கள் சிங்கள இனமும் அல்ல’ பௌத்த மதமும் அல்ல. பௌத்த மதம் புத்தருக்குப் பின்னர் புத்தரால் உருவாக்கப்பட்டது. எனவே, இலங்கையில் பௌத்தரும் அல்லாத சிங்களவர்களும் அல்லாத மனித இனத்தவர் ஆதிகாலம் தொட்டே வாழ்ந்துள்ளனர். இதை சிங்கள இனமோ, பௌத்த மதமோ தனித்து உரிமை கொண்டாட முடியாது!

இந்த நாட்டில் பௌத்த மக்களும் சிங்கள இனத்தவர்களும் அதிகமாக வாழ்வதால் இது ஒரு ஜனநாயக நாடு என்பதால் அவர்களுக்கு ஒரு தனிச் சிறப்பும் தனி அந்தஸ்தும் இருக்கலாhம்.

நாட்டில் பூர்வீகக் குடிகள் என்ற அந்தஸ்த்துக்கு அவர்கள் உரிமை கொண்டாட முடியாது என்பதும் தமிழ் முஸ்லிம் மக்களை வந்தேரிகள் என குறைத்துக் கூற முடியாது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இந்த நாட்டில் வாழ்ந்த பண்டைய மக்களுக்கும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் பூர்வீகத்துக்கும் உரிய தொடர்பு குறித்து அடுத்த இதழில் நோக்குவோம்.

இன்ஷா அல்லாஹ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *