Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » சொத்துப் பங்கீட்டில் பெண்ணுக்கு ஏன் இந்த அநீதி! | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-32 [சூறா அந்நிஸா–09]

சொத்துப் பங்கீட்டில் பெண்ணுக்கு ஏன் இந்த அநீதி! | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-32 [சூறா அந்நிஸா–09]

“இரு பெண்களுக்குரிய பங்கு போன்றது ஒரு ஆணுக்கு உண்டு என உங்கள் பிள்ளைகள் விடயத்தில் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்.” (4:11)

ஆணை விட பெண்ணுக்கு சொத்து அரைவாசி குறைவாகக் கொடுக்கும் படி இந்த வசனம் கூறுகின்றது.

பெண்ணுக்கு பாதிப் பங்கு என்பது அநீதியானது என முஸ்லிம் அல்லாத பலரால் விமர்சிக் கப்படுகின்றது. இது குறித்த தெளிவு அவசியமாகும்.

நபி(ச) அவர்கள் இஸ்லாமிய பிரசாரம் செய்ய முன்னர் பெண்ணுக்கு எவ்வித சொத்துரிமையும் இருக்கவில்லை. அவளே சொத்துடன் சொத்தாகப் பகிரப்பட்டு வந்தாள். இஸ்லாம் பெண்ணுக்கு சொத்துரிமை வழங்கியது. நவீன உலகில் கூட ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் பெண் தனதுபெயரில் சொத்துக்களை வைத்திருக்கும் உரிமையையும் பெற்றாள்.

பெண்ணைப் போன்ற இரு மடங்கு சொத்து என்ற இஸ்லாமிய சட்டத்தில் இருக்கக்கூடிய நீதி நியாயத்தை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பொறுப்பு:
இஸ்லாம் ஆண்கள் மீதுதான் பொருளாதாரப் பொறுப்புக்களைச் சுமத்தியுள்ளது. பொறுப்புக்கள் உள்ள ஆணுக்கு பொருளாதார பொறுப்புக்கள் சுமத்தப் படாத பெண்ணுக்குக் கொடுப்பதை விட அதிகமாகக் கொடுப்பது அநீதியாகாது.

பங்களிப்பு:
ஒரு தந்தையின் பொருளாதாரத் தேடலில் மகளை விட மகன்தான் அதிக பங்களிப்புச் செய்திருப்பான். பொருளாதாரத் தேடலில் அதிக பங்களிப்புச் செய்த மகனுக்கு பொருளாதாரத் தேடலில் குறைந்த பங்களிப்புச் செய்த அல்லது பங்களிப்பே செய்யாத மகளுக்குக் கொடுப்பதை விட அதிகமாகக் கொடுப்பது அநீதியாகாது!

குறைந்த செலவு:
ஒரு ஆண் பிள்ளைக்குச் செலவிடுவதை விட அதிகமாக பெண் பிள்ளைக்கு ஒரு தந்தை செலவிடுகின்றான். ஆசைக்கு ஒரு மகளும் ஆஸ்த்திக்கு ஒரு மகனும் என்று கூறுவார்கள். பெண் பிள்ளைகளுக்கு நகை-நட்டு என்றும், அலங்கார வகைகள் என்றும், ஆடை அணிகலன்கள் என்றும், சீர் வரிசை என்றும் ஆண் பிள்ளைக்குச் செலவிடுவதை விட அதிகமாகவே ஒரு தந்தை செலவழித்து விடுகின்றான். ஆனால், ஆண் பிள்ளைக்கு இந்த அளவு அதிக செவீனங்கள் இல்லை. வாழும்போதே அதிக அளவு செல்வத்தைக் கொடுத்து விட்ட மகளை விட குறைந்த அளவு செல்வத்தை வழங்கிய மகனுக்கு சற்று கூடுதலாகக் கொடுப்பது குற்றமாகாது!

கைமாறும் சொத்து:
உழைத்த ஒருவன் தனது சொத்து தனது குடும்பத்துக்குள் இருக்க வேண்டும் என்றே விரும்புவான். ஒரு தந்தை மகனுக்கும், மகளுக்கும் ஒவ்வொரு கோடி கொடுப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். மகனுக்குக் கொடுத்த பணம் இவனது குடும்பத்திற்குள்ளேயே இருப்பதாகக் கொள்ளப்படும். மகளுக்குக் கொடுத்த பணம் அவள் கணவன் மற்றும் கணவனின் குடும்பத்திற்குக் கொடுத்த பணமாக மாறிப் போய்விடும். ஒரு வேளை, மகனிடம் இருக்கும் பணத்தை தேவை ஏற்பட்டால் கேட்பது போல் மகளிடம் கொடுத்ததைக் கேட்க முடியாத நிலை ஏற்படும்.

இதையே சொத்துப் பங்கீடு தொடர்பான இந்த வசனத்திலும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

‘உங்கள் பெற்றோரிலும் பிள்ளைகளிலும் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார்? என்பதை அறியமாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் மிக்க அறிந்தவனாகவும், ஞானம் மிக்கவனாகவும் இருக்கின்றான்” என்று கூறுகின்றான்.

அடுத்து, சொத்துப் பங்கீட்டில், மகன், மகளை விட அதிக பங்கு பெறுவான் என்பதை விளங்கியே இஸ்லாமிய பாகப் பிரிவினை எதிர்க்கப்படுகின்றது. ஆனால், சில போது பெண் ஆணுக்கு நிகரான அளவையும், சில போது ஆணை விட அதிகமாகவும் பெறக் கூடிய சந்தர்ப்பங்களும் இஸ்லாமிய சொத்துப் பங்கீட்டில் வருவதுண்டு!

உதாரணமாக ஒருவர் மரணிக்கின்றார். அவருக்கு தாய் வழியில் சகோதர சகோதரிகளும் இருக்கின்றனர். இவரின் சொத்தைப் பங்கீடு செய்யும் போது 1/3 பகுதி அவர்களுக்கு மத்தியில் சமமாகப் பங்கிடப்படும். ஆண், பெண் இருவரும் சம அளவில் பங்கு பெறுவார்கள்.

இவ்வாறே, மரணித்த ஒருவருக்கு இரு பெண் பிள்ளைகளும் ஒரு சகோதரனும் இருந்தால் ஒவ்வொருவருக்கும் 1/3 பகுதி கிடைக்கும். இங்கு சகோதரனுக்குக் கிடைக்கும் சம அளவு பங்கு மகள்மார் ஒவ்வொருவருக்கும் கிடைக்கின்றது.

இவ்வாறே ஒருவர் மரணிக்கின்றார். அவருக்கு ஒரு மகள், ஒரு சகோதரி , ஒரு சாச்சா இருந்தால், மகளுக்கு 1/2 பங்கும், சகோதரிக்கு 1/2 பங்கும், கொடுக்கப்படும். தநதையின் உடன் பிறந்த சகோதரன் (சாச்சா, பெரியப்பா) பங்கு எதையும் பெற முடியாத நிலை ஏற்படும்.

இவ்வாறான பல சந்தர்ப்பங்களும் உள்ளன என்பதை இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் கவனத்திற் கொள்வது அவசியமாகும். இஸ்லாமிய பாகப் பிரிவினை என்பது நடைமுறைக்கு ஏற்றது மட்டுமன்றி நியாயமானதும் கூட என்பதை நடுநிலையோடு சிந்தித்தால் உணர முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *