Featured Posts
Home » பொதுவானவை » தலையங்கம் » இஸ்லாம் என்பது இதுதானா? சம கால நிகழ்வுகளும் இஸ்லாத்தின் நிலைப்பாடும்

இஸ்லாம் என்பது இதுதானா? சம கால நிகழ்வுகளும் இஸ்லாத்தின் நிலைப்பாடும்

sappathi

– முஹம்மது நியாஸ்

இஸ்லாம் என்பது இன்றைய நவீன உலகில் மனிதனை நோக்கி எழுகின்ற சவால்கள் அனைத்திற்கும் அறிவுபூர்வமான பல தீர்வுகளை வழங்கி அதன் தனித்துவத்தைப் பிரதிபலிப்பதில் முன்னணி வகிக்கின்ற ஓர் உன்னத மார்க்கமாகும். அதேபோன்று அல்லாஹுத்தஆலாவால் இறக்கியருளப்பட்ட புனித வேதமான அல் குர்ஆன் பல அற்புதங்களை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு பரிசுத்த வேதமும் வழிகாட்டியுமாகும். அதன் காரணமாகவேதான் இன்றளவும் அவ்வேதத்திலுள்ள அறிவு பூர்வமான நவீன காலத்தின் அறிவியலுக்கே பாடம் புகட்டுகின்ற பல விடயங்களை காண நேருகின்ற போது மேற்கத்தேய அறிஞர்கள் பலரும் அதன்பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை நோக்கி வீறு நடை போடுகின்ற காட்சிகளை நாம் அவதானிக்கிறோம்.

ஆனால் இவ்வாறான ஒரு அறிவுபூர்வமான, மாற்றுமத மக்களாலும் நன்மதிப்பைப் பெற்ற ஓர் வாழ்வியல் வழிகாட்டியை வேதமாகவும் அதன் போதனைகளை மார்க்கமாகும் ஏற்றிருக்கக் கூடிய முஸ்லிம்களை நிலைமையை நாம் எடுத்து நோக்கினால் அது மிகவும் பரிதாபகரமாகவே காணப்படுகிறது. மூட நம்பிக்கைகளிலும் மௌட்டீக சிந்தனைகளிலும் ஏனைய மதங்களுடன் போட்டி போடுகின்ற அளவிற்கு இன்று முஸ்லிம் சமூகத்தின் நிலைமை காணப்படுவது வேதனையான விடயமாகும்.

அந்த வகையில் தற்போது புதிதாக உருவெடுத்துள்ள ஓர் வழிகேடும் அடிமட்ட மடமை வாதமும்தான் கண்டவற்றிலெல்லாம் அல்லாஹ்வின், நபிகளாரின் பெயரை காட்சிப்படுத்துவதாகும். தக்காளிப் பழத்தின் உட்பகுதியிலுள்ள ஈறுகளில், உருளைக்கிழங்கின் அழுகிய பகுதிகளில், மேகக்கூட்டத்தில், மாடுகள் போன்ற மிருகங்களின் உடலிலுள்ள கோடுகளில், உணவுப்பொருளான ரொட்டியின் கருகிய பகுதி போன்றவற்றில் மற்றும் இன்னோரன்ன பொருட்களில் “அல்லாஹ்” “முஹம்மத்” என்ற அரபுச் சொற்களின் வடிவம் காணப்படுகின்ற போது அவற்றை நமது சமூகம் ஓர் அதிசயப் பொருட்களாகவும் அவ்வடையாளங்கள் ஏதாவது மிருகங்களில் இருக்குமானால் அம்மிருகங்களை அல்லாஹ்வின் அருள் பொருந்திய மிருகங்களாகவும் அவற்றுக்கு ஏதோவொரு தெய்வீக சக்தி இருப்பதாகவும் கருதி அவ்விடயத்தை பிரபல்யப்படுத்தி அதன் மூலம் தானும் கெட்டு தனது சமூகத்தையும் கெடுத்து அதற்கு மேலாக மாற்றுமத மக்களின் உள்ளங்களிலும் இஸ்லாத்தைப்பற்றிய ஓர் தவறான சிந்தனைப்போக்கை விதைத்து விடக்கூடிய காட்சிகளை நாம் அவதானிக்கிறோம்.

போதாகுறைக்கு முஸ்லிம் பிரதேசங்களில் இருந்து முஸ்லிம்களாலேயே இயக்கப்படுகின்ற இஸ்லாமியப் பெயர்தாங்கி ஊடகங்களும் இவ்விடயத்திற்கு கண், காது, மூக்கு எல்லாம் வைத்து அலங்கரித்து முன்பக்க செய்தியாகவும் வெளியிடுவதில் அளவில்லா ஆனந்தம் அடைகின்ற ஓர் கசப்பான உண்மையையும் நாம் சுட்டிக்காட்டுவதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை.

உண்மையில் இவ்வாறு மிருகங்கள் மற்றும் எனைய பொருட்களில், இடங்களில் அல்லாஹ்வினதும் அவனது தூதரினுடையதும் பெயர்கள் இருப்பதற்கும் புனித இஸ்லாமிய மார்க்கத்திற்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்கின்றனவா?

உண்மையில் அல்லாஹ்வினதும் நபிகளாரினதும் பெயர்கள் மாத்திரம்தான் இவ்வாறான நிகழ்வுகளில் இடம்பிடிக்கின்றனவா?

அவ்வாறு இருப்பதனால் அப்பொருட்களோ அல்லது அவ் இடங்களோ இன்றைய சமூகம் கருதுவது போன்று ஓர் அதிசயமோ அல்லது சிறப்புக்களோ பொருந்தியவையாக மாறிவிடுமா?

இவ்வாறான நிகழ்வுகள் தொடர்பிலான இஸ்லாத்தின் வழிகாட்டல்கல்தான் என்ன?

என்பது பற்றி சற்று ஆராய்வோம்.

பொதுவாகவே இன்றைய சூழலில் இப்படியான அற்புதங்கள் என அநேகமான மக்களினால் பிரலாபிக்கக்கூடிய இவ்வாறான நிகழ்வுகளை நாம் எடுத்து நோக்கினால் அவை குறித்த ஒரு சமூகத்திற்கு, மதத்திற்கு மாத்திரம் சொந்தமானவையாக அல்லாமல் அனைத்துவிதமான மதத்தினரையும் ஆட்கொள்ளக்கூடிய ஒரு நிகழ்வாகவே காணப்படுகிறது.

  • பிள்ளையார் சிலையிலிருந்து பால்வடிவது,
  • தேங்காயின் முன்பகுதி விநாயகர் உருவத்தில் வளைந்து காணப்படுவது,
  • பொரித்த வாழைக்காயில் “ஓம்” எனும் சின்னம் காணப்படுவது,
  • இயேசுவின் கண்களில் இரத்தம் வடிவது, இயேசுவின் கால்களில் தண்ணீர் வடிவது,
  • மின்னழுத்தி, (Iron Box) துணியில் பட்டுக் கருகிய இடம் இயேசுவின் முகத்தோற்றத்தைப் போன்று காணப்படுவது,
  • அதேபோன்று இஸ்லாமிய சமுதாயத்திலும் குழந்தையின் கால்களில் “அல்லாஹ்” எனும் சொற்பதம் காணப்பட்ட சம்பவம்,
  • தக்காளிப் பழத்தின் உள்ளீறுகள் “அல்லாஹ்” என்ற நாமத்தின் வடிவில் காணப்பட்ட செய்திகள்,
  • மேகக்கூட்டம் “அல்லாஹ்” என்ற வடிவத்தில் ஒன்று சேர்ந்திருந்த சந்தர்ப்பங்கள்
  • இன்னும் இவை போன்று ஒவ்வொரு மதத்தினருக்கும் அவரவர்களுடைய மதங்களை பிரதிபலிக்கக்கூடிய வகையில் அவ்வப்போது பல சம்பவங்கள் நமது இலங்கை நாட்டிலேயே மிகவும் அதிகமாக இடம்பெற்றுவிட்டன.

அவ்வாறான சம்பவங்களில் அதிகமானவைகள் அந்தந்தக் காலகட்டங்களில் வைத்தியர்களாலும் துறைசார்ந்த நிபுணர்களாலும் சித்து வேலைகள் என்றும் ஏமாற்றுப் பேர்வழிகளின் உலகாதாயம் கருதிய பித்தலாட்டம் என்றும் மிகத்தெளிவாகவும் துல்லியமாகவும் நிரூபிக்கப்பட்டு பொய்களும் புரட்டுக்களும் அம்பலத்திற்கு வந்த வரலாறுகளும் நாம் மறந்துவிட்ட ஒன்றல்ல.

உதாரணத்திற்கு கிழக்குமாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடிப் பிரதேசத்தில் ஒரு குடும்பம் தங்களின் ஆறு மாதக் குழந்தையின் உடலில் “அல்லாஹ்” என்ற அறபுப்பதம் இருப்பதாக வாதிட்டது. ஆனால் இறுதியில் அது மருதோன்றி சாயத்தால் உருவாக்கப்பட்ட ஏமாற்றுவேலை என்னும் சங்கதி சந்தி சிரிக்க ஆரம்பித்ததும் அதில் சம்பந்தப்பட்டோர் அனைவரும் சத்தமில்லாமல் அடங்கிப்போயினர்.

அதேபோன்று திருகோணமலையில் தேவாலயத்தின் அருகேயுள்ள உள்ள ஓர் இயேசுவின் சிலையின் கால்ப்பகுதியிலிருந்து தண்ணீர் வழிந்தோடுவதாக வந்த செய்தியை கேள்வியுற்ற மக்கள் அத்தண்ணீரை குடிப்பதற்கும் பாதுகாத்து வைத்துக்கொள்வதற்கும் முடியடித்துக்கொண்டு விரைந்தோடினர். இறுதியில் அது அவ்வழியாகச் செல்லும் சாக்கடை நீரின் குழாய்களில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக அவ்வசுத்தமான நீர் இயேசுவின் சிலையின் கால்களில் வழிந்தோடியது எனத் தெரியவந்ததும் மதகுருமார்கள் தொடக்கம் அனைவரும் தலைகுனிந்த நிகழ்வுகளும் நடந்தேறியே உள்ளன.

இன்னும் மேல் மாகாணத்தின் பம்பலப்பிட்டிய பகுதியிலுள்ள ஒரு ஹிந்து மதப்பெண், தனது அலுமாரியில் வைத்திருந்த தேங்காய் ஒன்று விநாயகரின் உருவத்தில் நீண்டு வளைந்திருந்ததாகக் கூறிக் கூக்குரல் எழுப்பினார். ஆனால் நடந்ததோ வேறு. நீரில் நனைந்த உரிக்கப்படாத தேங்காய் ஒன்று வெகுநாட்களாக அலுமாரியில் வைக்கப்பட்டிருந்ததால் அதிலிருந்து முளை கிளம்பி அது வளர்வதற்கு இடமில்லாத காரணத்தினால் அலுமாரியின் தகரத்தில் முட்டிக்கொண்டு வளைந்திருந்தது. அதுவே பின்னால் விநாயகரின் உருவத்தில் தும்பிக்கையாக நீட்சியடைந்ததை உணராத அப்(பாவிப்)பெண்ணும் அது ‘கடவுளின் அவதாரமான தேங்காய்’ என ஊரைக்கூட்டிய பரிதாபமும் நமது இலங்கை நாட்டில் நாம் சந்தித்த வரலாறுகளில் ஒன்றுதான்.

எனவே உதாரணத்திற்காக நான் எடுத்துக்கூறிய இவ்வாறான நிகழ்வுகளில் இன்னும் எத்தனையோ சம்பவங்கள் மலிந்து காணப்பட்டாலும் படிப்பினைக்காக சில விடயங்களை இங்கே தொட்டுக்காட்டியுள்ளேன்.

ஆனால் அவை அனைத்துமே வெறும் பித்தலாட்டங்களும், போக்கிரித்தனங்களுமே அன்றி எதிலுமே ஓர் இயற்கையான, அறிவிற்குப் பொருந்தக்கூடிய சம்பவங்கள் காணப்படவில்லை என்பது தனியான விடயம்.

மதங்களின் உண்மைத்தன்மைக்கு அளவுகோல் என்ன?

natural

பொதுவாக அனைத்து மதங்களுமே ஏதோவொரு கடவுட்கொள்கையினையும் தனிப்பட்ட மதக் கோட்பாடுகளையும் கொண்டிருக்கின்றன. அந்தந்த மதங்களின் வேதங்களிலும் அவற்றுக்கான சான்றுகளும் காணப்படுவது ஓர் பொதுவான தன்மையாகும். ஒரு மதம் கடவுளின் மதம் என்றோ, இயற்கையான நடைமுறைக்கு சாத்தியப்படகூடிய மதம் என்றோ நிறுவ வேண்டுமானால் அம்மதத்திலுள்ள மனிதனுக்கு நன்மை பயக்கக்கூடிய செயற்பாடுகள், கடவுளின் கட்டளைகள், மதரீதியான வலியுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்கள் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்டே நிறுவ முற்பட வேண்டுமேயன்றி, நிகழ் காலத்தில் நடைபெறக்கூடிய இவ்வாறான எதேச்சையான நிகழ்வுகளை ஆதாரமாகக் கொண்டு ஒரு மதத்தின் உண்மைத்தன்மையை நிறுவ முற்படுவது வடிகட்டிய முட்டாள்த்தனமேயன்றி வேறில்லை.

எனவே இவ்வாறான நிகழ்வுகள் எந்த மதத்தோடு தொடர்பு பட்டிருந்தாலும் அது எவ்வாறான ஒரு பிரதேசத்தில் எவ்வகையான ஒரு மனிதரோடு தொடர்பு பட்டிருந்தாலும் அவை எதுவும் ஒரு கடவுளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சமயத்தை ஒரு வாழ்வியல் வழிகாட்டியை உண்மைப்படுத்தவதில் எந்தவிதத்திலும் உதவப்போவதோ அல்லது அத்தாட்சிப்படுத்தப்போவதோ கிடையாது என்பதை சகல மதங்களையும் சார்ந்த மக்களும் புரிந்துகொள்ளுதல் அவசியமாகும்.

இது தொடர்பான இஸ்லாமிய வழிகாட்டல் என்ன?

இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரைக்கும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ள, வழிகாட்டப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் அற்புதமானதும் அதிசயமானதுமேயாகும்.

இன்றைய நவீன உலகம் நேற்றுக்கூறிய ஒரு விடயம்தான் பெருவெடிப்புக் கொள்கை என்பது. ஆனால் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்னால் பாலைவனப்பகுதியில் பிறந்த (எழுதப் படிக்கத் தெரியாத) ஒரு மனிதர் அவருக்கு கடவுள் அறிவித்ததாகக் கூறினார்.

வானமும் பூமியும் இணைந்தே இருந்தன, அவற்றை நாமே ஒரு வெடிப்பை ஏற்படுத்திப் பிரித்தோம் என்று.(பார்க்க அல் குர்ஆன்.21:30) அது ஒரு உலகமகா அதிசயம்.

மழை நீர் உருவாவதை பற்றிக்கூட அடிப்படையறிவில்லாத அக்காலத்தில் விண்வெளியில் ஏற்பட்ட யுகமாற்றத்தைப் பற்றி ஓர் மனிதர் கூறினாரென்றால் அது இஸ்லாமிய மார்க்கத்தில் இன்று வரைக்கும் முறியடிக்கப்படாத ஓர் அற்புதமாகத் தெரியவில்லையா?

ஆணும் பெண்ணும் சேருகின்ற போதுதான் குழந்தை தரிக்கிறது என்ற விடயத்தில் கூட மூடலான நம்பிக்கை கொண்ட கற்காலத்தில் தாயின் கருவறையிலுள்ள உடலியல் இரகசியங்களைப் பற்றி ஒருமனிதர் தனக்கு கடவுள் அறிவித்ததாகக் கூறினாரே அது ஏன் நம்மவர்களுக்கு அதிசயமாகத் தெரியவில்லை.(பார்க்க…அல் குர்ஆன்.39:06)

கடல் பயணம் சென்றிடாத  ஒரு மனிதர் கடலின் அடியாளத்தில்கூட பாரிய அலைகள் உண்டு என தனக்குக் கடவுளின் அறிவிப்பு வந்ததெனக் கூறுகிறார். ஆனால் அறிவியலாளர்கள் என அங்கலாய்க்கின்ற தற்போதைய நாகரிக உலகம் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்குப் பிறகு கடந்த 26.12.2004 அன்றுதான் பல இலட்சக்கணக்கான உயிர்களையும் பல்லாயிரம் மில்லியன் பெறுமதியான சொத்துக்களையும் விலையாகக் கொடுத்ததன் மூலம் கண்டுகொண்டது. அதற்கு சுனாமி என்றும் பெயர் சூட்டியது.இது ஏன் ஓர் அதிசயமாகத் தெரியவில்லை?

இன்னும் இது போன்ற ஏராளமான முன்னறிவிப்புக்களும் நவீன அறிவியல் உலகிற்கே பிரத்தியேக வகுப்பெடுக்கின்ற வானவியல், உடலியல், புவியியல், கருவியல், இரசாயனவியல், பௌதீகவியல் கோட்பாடுகளும் முழு உலகிற்குமே நேர்வழி காட்டவந்த புனித குர்ஆனில் மலிந்தும் நிறைந்துமிருக்க அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாது கல்லிலும் மண்ணிலும் மரத்திலும் கண்ட கண்ட பொருள்களிலும் இஸ்லாமிய அடையாளங்களைத் தேடிக்கொண்டுள்ள நமது சமூகத்தின் மார்க்க ரீதியான இவ்வங்குரோத்து நிலை உண்மையிலேயே கவலைக்குரியது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் ‘நம்பியே ஆகவேண்டிய’ அல்லது ‘பாதுகாப்புப் பெற்றே தீர வேண்டிய’ நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு (வஹீ) தான். எனவே, நபிமார்களிலேயே மறுமைநாளில், பின்பற்றுவோர் அதிகமுள்ள நபியாக நானே இருப்பேன் என எதிர்பார்க்கிறேன். (சஹீஹுல் புஹாரி:7174)

எனவே இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரையில் தற்காலத்தில் அற்புதமென்று ஒன்று இருக்குமானால் அது அல் குர்ஆன் மட்டுமேயன்றி வேறில்லை. இறைவன் காலத்தின் தேவையறிந்து அந்தந்தக் காலங்களில் நபிமார்களுக்கு சில அற்புதங்களைக் கொடுத்திருந்தான். அவையனைத்தும் அப்போதே நிறைவு பெற்றுவிட்டன. அதனால் தற்காலத்தில் நிகழ்கின்ற இவ்வாறான எந்தவிதமானதொரு நிகழ்வுகளும் இஸ்லாத்தின் உண்மைத்தன்மையினைப் பிரதிபலிக்கவோ அல்லது வணக்க வழிபாடுகளில் மாற்றங்களைக் கொண்டுவரவோ மாட்டாது என்னும் விடயத்தில் முஸ்லிம்களாகிய நாம் மிகவும் தெளிவுடனும் போதிய அறிவுடனும் இருந்து கொள்வது மாத்திரமல்லாது இது போன்ற செயற்பாடுகளால் இஸ்லாமிய மார்க்கத்தின் தனித்துவத்திற்கு சேறு பூச முற்படுகின்ற அந்நிய சக்திகளின் விடயங்களிலும் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்துகொள்ளல் வேண்டும்.

வழமைக்கு மாற்றமான இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றபோது அதற்கு அதிகபட்ச மதிப்புக்கொடுத்து அன்னியர்கள் மத்தியில் இஸ்லாமிய மார்க்கத்தின் தனித்துவத்தை மழுங்கடிக்கின்ற வகையில் ஊடகங்கள் வாயிலாக இச்செய்திகளை வெளியிடுகின்ற ஊடகங்களும் தனிநபர்களும் சற்று இவ்விடயத்தில் மார்க்க ரீதியான பொறுப்புணர்வை வெளிக்கொணர்வது காலத்தின் தேவைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

8 comments

  1. மாஷா அல்லாஹ் காலத்திற்கு தேவையான ஆக்கம் சமூக வலைத் தளங்களில் இந்த விடயம் தொடர்பாக சரியான விளக்கம் இல்லாதால் நமது மக்கள் படும் பாடு பெறும் பாடு…….

    எழுதிய சகோதரருக்கு அல்லாஹ் அருள் பாளிப்பானாக!

  2. Abdulhameed Abu Afsheen

    அல்ஹம்துலில்லாஹ் அருமையான பதிவு.. நவீன காலத்திற்கு மிகவும் தேவையான படிப்பினையான பதிவு.. அல்லாஹ் (சுப) தங்களுக்கு அருள்புரிவானாக… – அபூ அஃப்ஷீன்

  3. Brother assalamun alaikum! some lines are not agreed by me !
    பாலைவனப்பகுதியில் ஆடு மேய்த்துத் திரிந்த ஒரு மனிதர் ,கடல் பயணம் என்பதை கனவில் கூடக் கண்டிராத ஒரு மனிதர்., these lines are not fair! you are writing about a person who is not an ordinary man!
    the success and failure of every person is depends upon following and rejecting Him!
    such lines are hurting our sentiments! avoid if you find my comments are correct!

  4. நிர்வாகி

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    Dear Abuahamara

    உங்களின் மறுமொழியை கட்டுரை ஆசிரியருக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.

    கட்டுரை சரி செய்யப்பட வேண்டும் என்று நாம் உணர்வதால், உடனே திருத்தம் செய்துள்ளோம்.

    பிழையான சொல்லாடலுக்காக வருந்துகிறோம்.

    அன்புடன்
    நிர்வாகி

  5. எத்துணை வியப்புக்குரியது தங்களுடைய நிர்வாகப் பொறுப்பும் பண்பாட்டு சொல்லாடலும்..தொடரட்டும்..

  6. நிர்வாகி

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    சகோ. இம்ரான்,
    பணி நேரத்திற்குப் பிறகு கிடைக்கும் சொற்ப ஓய்வு நேரங்களில் அர்பணிப்பு (Dedicated) மனப்பான்மையுடன் மக்களுக்காக, மக்களில் ஒரு சிலரால் நடத்தப்படும் தளம்தான் இஸ்லாம்கல்வி.காம்.

    பிழைகள் மனிதனுக்கு உரியது. பிழையற்றவன் அல்லாஹ் மட்டுமே.

    நற்பணிகளை ஏற்றுக்கொள்ள அல்லாஹ்விடம் மட்டும் இறைஞ்சுகிறோம்.

  7. to the editor

    assalamu alikum wa rahmathullahi wa barakahu

    i read an article posted by you regarding why this situvations for towheed jamath s?
    is only one sided and just you want to register your enmity against tntj brothers

    you are vomiting the same like qasimi

    why bro.shamshudeen and his family only have dignity ?
    his family dignity is equal kaaba?

    all other towheed sisters dont have dignity ( maanam)
    he is saying bro p.j will get more disease like cancer ?

    who is he to say this are u allah?
    he is saying bro. pj poch aripu kooda and other bad words.
    who start this controversy
    tntjj or shamshuden qasimi ?
    he is the one to say illicit word s first against towheed brothers and sisters

    stop bitting towheed brothers and sisters

    you will be counted in the day after judgment
    because
    you are saying islam kalvi is intermediate
    no you are not intermediate
    your only duty is to oppose tntj
    so in a muslims view u and tntj are same no difference

  8. Assalamu alaikum wrwb.
    jazakallahu khair ya shaik! thank you for your kind response!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *