Featured Posts
Home » இஸ்லாம் » அகீதா » அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-9)

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-9)

– M.T.M.ஹிஷாம் மதனீ

ஜஹமிய்யாக்கள்

அறிமுகம்:
‘ஜஹம் இப்னு ஸப்வான்’ என்பவரைப் பின்பற்றுகின்றவர்கள் ஜஹமிய்யாக்கள் எனப்படுவர். ஜஹம் இப்னு ஸப்வான் குராஸானில் (ஈரான்) உள்ள திர்மித் எனும் பகுதியைச் சேர்ந்தவர். இவர் சில தத்துவங்களையும் சித்தாந்தங்களையும் அடிப்படையாகக் கொண்டவர். இவர் அல்லாஹ்வைப் பற்றியே அதிகமாகத் தர்க்கம் புரிந்துள்ளார்.

கொள்கைகள்:
ஜஹம் இப்னு ஸப்வானுடைய அடிப்படைக் கொள்கைகள் கீழ்வருமாறு:

1. அல் குர்ஆன் படைக்கப்பட்டது என்ற நம்பிக்கை.

2. அல்லாஹ், நபி மூஸா (அலை) அவர்களுடன் பேசவில்லை, அவன் பேசவும் மாட்டான்.

3. அல்லாஹ்வை (மறுமையில்) காணமுடியாது.

4. அல்லாஹ் அர்ஷின் மீது இல்லை,

என்பன போன்ற குர்ஆனுக்கும் நபிவழிக்கும் நேரடியாக முரண்படுகின்ற கருத்துக்களை உலகம் முழுவதும் பரவச் செய்ததன் மூலம் குர்ஆனுக்கும் ஹதீஸூக்கும் எதிராகப் புரட்சி செய்ததுடன் அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத்தினரின் கொள்கைகளையும் எதிர்த்து வந்தார்.

மேற்கூறப்பட்ட அம்சங்களுடன் மேலும் மூன்று முக்கியமான அடிப்படைக் கொள்கைகளையும் அறிமுகம் செய்தார். அவைகளாவன:

1. அல்லாஹ்வின் இயல்புகள் மற்றும் பண்புகள் ஆகியவற்றைப் பாழ்படுத்துதல்: அல்லாஹ்வை பண்புகள் கூறி வர்ணித்து அவனைப் படைப்புகளுக்கு ஒப்பாக்குவதையே இது குறிக்கும். இப்படியான தவறான கருத்தைச் சொல்லி அக்கருத்தை நிலைநிறுத்துவதற்காக அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் இடம்பெற்றுள்ள அல்லாஹ்வின் பண்புகளை மறுத்துரைக்கின்றனர்.

2. நிர்ப்பந்தம்: மனிதன் எதனையும் தானாகச் செய்ய முடியாது. ஏனெனில், மனிதனுடைய எல்லாச் செயல்களும் அல்லாஹ்வின் நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன. எனவே, மனிதன் எதனையும் தானாகச் செய்கின்ற ஆற்றலையோ தேர்வு செய்கின்ற சுதந்திரத்தையோ பெற மாட்டான் என்கிறார்.

3. ஈமான் என்பது ஒரு மனிதன் அல்லாஹ்வைப் பற்றி அறிந்து கொள்வதாகும். எனவே, நாவினால் அல்லாஹ்வைப் புறக்கணிக்கின்ற ஒரு மனிதன் இறை நிராகரிப்பாளராகமாட்டான். ஏனெனில், ஒரு மனிதன் அல்லாஹ்வைப் புறக்கணிப்பதால் அவனிடமிருந்து அல்லாஹ்வைப் பற்றிய அறிவு நீங்கிவிடுவதில்லை. மேலும், முஃமின்கள் அனைவரும் ஈமானில் ஒரே தரத்தையுடையவர்களாவர். ஈமானைப் பொறுத்தவரை அவர்களிடையே ஏற்றத்தாழ்வு கிடையாது.

மேலே குறிப்பிடப்பட்ட மூன்று அடிப்படைகளுமே ஜஹமிய்யாக்களின் வழிகேட்டுக்கு மிக முக்கியமான காரணங்களாக இருந்துள்ளன. ஜஹம் இப்னு ஸப்வானுக்கு இக்கொள்கை ‘ஜஃத் இப்னு திர்ஹம்’ மூலம் கிடைத்தது. இவர் தாபியீன்கள் காலத்தில் வாழ்ந்தவர். மேற்கூறப்பட்ட கொள்கைகளால் கவரப்பட்டு வழி கெட்டவர்களில் ஒருவரான ஜஃத் இப்னு திர்ஹம் ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தன்று ஈராக்கில் வைத்துக் கொல்லப்பட்டார். (மீஸானுல் இஃதிதால்: 1:369)

இக்கொள்கையை முதலில் அறிமுகம் செய்தவர் நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்த ‘லபீத் இப்னு அஃஸம்’ தான் எனவும் சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஜஹமிய்யாக்கள் தொடர்பான மார்க்கத் தீர்ப்பு:
இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘ஜஹமிய்யாக்கள் காபிர்கள் என்பதே இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களதும் அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாஅத்தின் அறிஞர்களதும் கருத்தாகும்.’ (மஜ்மூஉல் பதாவா: 12-4)

ஜஹமிய்யாக்கள் இறைநிராகரிப்பாளர்கள் ஆவார்கள் என ஸலபுஸ்ஸாலிஹீன்களில் 500 அறிஞர்கள் தீர்ப்புக் கூறியுள்ளதாக இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (நூனிய்யா:1:115)

ஜஹமிய்யாக்களின் புதிய பரிநாமம்:
ஜஹமிய்யாக்கள் என்போர் இன்று உலகத்தில் இல்லை என்று சிலர் கருதுகின்றனர். ஜஹமிய்யாக்கள் என்ற பெயரில் இவர்கள் காணப்படாவிடினும் அவர்களது கொள்கைகளுடனும் கோட்பாடுகளுடனும் வாழக்கூடிய மக்கள் காணப்படுகின்றனர். ஜஹமிய்யாக்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் முழுமையாக அஷ்அரிய்யாக்களும் முஃதஸிலாக்களும் பின்பற்றுகின்றனர்.

One comment

  1. அருமையான பதிவு; இன்னும் ஆழமாகப் பதியப்பட்ட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *