Featured Posts
Home » இஸ்லாம் » சுவனம் » சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-06)

சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-06)

– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) அல்லாஹ்வுடன் நேரடியாக உரையாடுதல் இது சுவனவாதிகள் பெறும் மிகப் பெரும் பாக்கியமாகும். மனிதர்களும், ஜின்களும் தமது படைப்பாளனாகிய அல்லாஹ்வை அவர்களின் மரணத்தின் பின் அவன் அவர்களை உயிர்கொடுத்து எழுப்பியதும் நேரில் காணுவார்கள். முஃமின்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள், அல்லாஹ்வைக் கண்டு குதூகலிப்பார்கள். ஆனந்தமாக அந்த இரட்சகனோடு உரையாடுவார்கள். அந்த மறுமை நாள் என்பது மறுபிறவியைச் சொல்கின்ற நாளன்று. மாற்றமாக, அது ஒரு பிறவியை மீண்டும் பிரதி எடுக்கும் நாளாகும்.சுவனத்தில் நுழையும் அல்லாஹ்வின் அடியார்களான முஃமின்கள் அந்த அல்லாஹ்வுடன் நேரடியாகப் பேசுவார்கள் என்று பல நபிமொழிகள் தெரிவிக்கின்றன.

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ صُهَيْبٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ قَالَ يَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى تُرِيدُونَ شَيْئًا أَزِيدُكُمْ فَيَقُولُونَ أَلَمْ تُبَيِّضْ وُجُوهَنَا أَلَمْ تُدْخِلْنَا الْجَنَّةَ وَتُنَجِّنَا مِنْ النَّارِ قَالَ فَيَكْشِفُ الْحِجَابَ فَمَا أُعْطُوا شَيْئًا أَحَبَّ إِلَيْهِمْ مِنْ النَّظَرِ إِلَى رَبِّهِمْ عَزَّ وَجَلَّ

சுவனவாதிகள் சுவனத்தில் நுழைந்ததும், நான் உங்களுக்கு ஏதும் அதிகப்படியாகத் தந்திட நீங்கள் விரும்புகின்றீர்களா? என்று அல்லாஹ் (சுவனவாதிளை நோக்கி) கேட்பான். அதற்கு அவர்கள், எமது முகங்களை நீவெண்மையாக்கவில்லையா? எம்மை நீ சுவனத்தில் நுழைவிக்கவில்லையா? எம்மை நீ நரகத்தில் இருந்து காப்பாற்றவில்லையா? (இதை விடவும் வேறு என்ன இருக்கின்றது) என பதில் அளிப்பார்கள். அப்போது அல்லாஹ் திரையை நீக்குவான். இந்நிலையில் அவர்கள் தமது இரட்சகனைப் பார்ப்;பதை விட வேறு எந்த ஒன்றும் இவர்களுக்கு விருப்பமானதாகக் கொடுக்கப்பட்டமாட்டார்கள் (முஸ்லிம்: பாடம்: முஃமின்கள் அல்லாஹ்வை மறுமையில் பார்ப்பதை உறுதி செய்தல்).

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ بِهَذَا الْإِسْنَادِ وَزَادَ ثُمَّ تَلَا هَذِهِ الْآيَةَ ] لِلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَى وَزِيَادَةٌ صحيح مسلم

மற்றொரு அறிவிப்பில்: எவர்கள் நன்மைகளைச் செய்தார்களோ அவர்களுக்கு (நன்மைகளும்), அதிகப்படியானவைகளும் இருக்கின்றன என்ற வசனத்தை- அல்லாஹ்வை மறுமையில் காண்பதைச் சுட்டிக்காட்டி மேற்படி வசனத்தை ஓதிக்காட்டினார்கள். (முஸ்லிம்)

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ لِأَهْلِ الْجَنَّةِ يَا أَهْلَ الْجَنَّةِ فَيَقُولُونَ لَبَّيْكَ رَبَّنَا وَسَعْدَيْكَ فَيَقُولُ هَلْ رَضِيتُمْ فَيَقُولُونَ وَمَا لَنَا لَا نَرْضَى وَقَدْ أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِنْ خَلْقِكَ فَيَقُولُ أَنَا أُعْطِيكُمْ أَفْضَلَ مِنْ ذَلِكَ قَالُوا يَا رَبِّ وَأَيُّ شَيْءٍ أَفْضَلُ مِنْ ذَلِكَ فَيَقُولُ أُحِلُّ عَلَيْكُمْ رِضْوَانِي فَلَا أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا (صحيح البخاري)

சுவனவாதிகளிடம், சுவனவாதிகளே! என்று அழைப்பான். அப்போது எங்கள் இரட்சகனே உனது அழைப்பிற்கு நாம் உனது அழைப்பிற்குவழிப்பட்டோம், உன்பாக்கியத்திற்கு வழிப்பட்டோம் என்று கூறுவார்கள். நீங்கள் நான் வழங்கி இருப்பதைப் பொருத்திக் கொண்டீர்களா? என்று கேட்பான் உனது படைப்புக்கள் யாருக்கும் வழங்காததை நீ எமக்கு வழங்கி இருக்க அதைக் கொண்டு நாம் பொருந்திக் கொள்ளாமல் இருக்க எமக்கென்ன நேர்ந்துள்ளது என்று கேட்பார்கள். நான் அதைவிட சிறந்ததை உங்களுக்கு தருகின்றேன் என்று கூறுவான். (சுவனவாதிகள்) அதைவிட சிறந்ததா (அது ) என்ன என (ஆச்சரியமாக) வினவுவார்கள்.

فَيَقُولُ أُحِلُّ عَلَيْكُمْ رِضْوَانِي فَلَا أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا (صحيح البخاري)

“உங்கள் மீது நான் எனது திருப்தியை இறக்குகின்றேன், “இனி ஒரு போதும் உங்கள் மீது நான் கோபம் கொள்ளமாட்டேன்” என்று கூறுவான். (புகாரி).

இவை மறுமையில் அல்லாஹ் தனது சுவனவாதிகளான அடியார்களுடன் அவனது உண்மையான தோற்றத்தை வெளிப்படுத்திப் பேசுவதை தெளிவுபடுத்தும் செய்திகளாகும்.

அல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக அவன் குர்ஆன் கூறுபவைகளைகளையும், அவனது தூதர் குறிப்பிடும் போது இது போன்ற இன்னும் பல செய்திகளை இன்றும் மறுத்துப் பேசும் மௌலவிகள், முஃப்திக்கள், முல்லாக்கள், இவற்றிற்கு தவறான வியக்கியானம் தருபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இதனை மறுக்கும் இவர்கள், தவறான விளக்கத்தின் மீது கட்டப்பட்ட இறையியல் கோட்பாட்டில் தடம்புரண்ட நிலையில்தான் தமது இந்த இறைமை இன்மை கோட்பாட்டின் பக்கமாக மக்களை அழைக்கின்றார்கள்.

இந்த உலகத்தில் அல்லாஹ்வைப் பற்றி விளக்குகின்ற போது காதின்றி கேட்பவன், கண் இன்றிப் பார்ப்பவன் என்றுதான் இன்றும் மாணவர்களுக்கு போதனை செய்து எங்குமில்லாத இறைவன் – அர்ஷலும் இல்லை, அர்சியிலும்- இல்லை எனக் காரசாரமாகப் போதனை நடத்துகின்றார்கள். மாணவர்களும் குருநாதாக்களின் கண்கெட்ட குருடர்களைப் போல நம்புகின்றார்கள். அல்லாஹ்வை அவனது அழகிய தோற்றத்தில் மறுமையில் நேரில் காணப்போகின்றோமே! அவன்தானே இந்த உலகத்தில் இதே தோற்றத்தில் இருக்க வேண்டும், அவனைத்தானே மறுமையில் பார்க்கவும் வேண்டும் என்று இந்த முல்லாக்களும் மாணவர்களும் ஒருநாளாவது தமது மனங்களை நோக்கிக் கேட்டிருப்பார்களா? அவ்வாறாயின் தாம் தவறாக நம்பும் தமது தவறான கோட்பாட்டை விட்டும் திருந்தியும் மாணவர்களையும், மக்களையும் திருத்தி இருப்பார்கள். அல்லாமதுல் குல்- எனப்பட்டம் போட்டுக் கொண்டு படைப்பாளனாகிய அல்லாஹ்வைப் பற்றியும், அவனது பெயர்கள், பண்புகள் பற்றியும் சரியான நம்பிக்கையில் இல்லாது என்ன செய்து என்ன செய்ய? சிந்தியுங்கள்.

عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَسَيُكَلِّمُهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ لَيْسَ بَيْنَ اللَّهِ وَبَيْنَهُ تُرْجُمَانٌ [صحيح البخاري ]

உங்களில் எவரும் மறுமையில் அல்லாஹ் அவரோடு பேசாமல் இருப்பதில்லை. அல்லாஹ்வுக்கும் அவருக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கமாட்டார்கள். (புகாரி) மற்றொரு அறிவிப்பில்:

مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا سَيُكَلِّمُهُ رَبُّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ وَلَا حِجَابٌ يَحْجُبُهُ -صحيح البخاري

உங்கள் எந்த ஒருவருடனும் அவரது இரட்சகன் பேசாமல் இருப்பதில்லை. அவனுக்கும் அம்மனிதனுக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளர்களோ, அவரை மறைக்கின்ற திரையோ இருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி).

இவ்வளவு தெளிவான ஹதீஸ்கள் படைப்பாளாகிய அல்லாஹ் தன்னை இந்த உலகில் மறைத்துக் கொண்டிருப்பது போன்று மறுமையில் மறைத்தவனாக இருக்கமாட்டான் எனக் கூறி இருக்க அவன் ஒன்றுமே இல்லாதவன் போல விளக்கம் தருவது எவ்வளவு பெரிய பாவம்? மறுமையில் அல்லாஹ் விசாரணை செய்வான் என்று நம்புகின்ற இவர்கள் இவ்வுலகில் அல்லாஹ்வை ஒன்றுமில்லாத ஒன்றாக நம்புவது முரண்பாடில்லையா? என்று சிந்தியுங்கள். மறுமையில் அல்லாஹ்வைப் பார்ப்பது உறுதி என்றால் இவ்வுலகிலும் அவன் அந்த தோற்றத்தில் இருக்கின்றான். ஆனால் மறைத்திருக்கின்றான். அவனது பண்புகளாக, தன்மைகளாக அவன் குறிப்பிடும் முகம், கை, கெண்டைக்கால், அர்ஷின்மீதிருத்தல், அவனது பேச்சு, வாழ்வு போன்ற பண்புகள் மனிதர்களிடம் இருப்பதால் அவற்றைப் பாழடித்து நம்பவேண்டும் என்ற போதனைதான் அவனை எங்குமே இல்லாதவனாக, இருந்தும் இல்லாதவனாக, அர்ஷின்மீதிலல்லாது எங்கும் நிறைந்தவனாக இவர்களை நம்பத்தூன்றியது.

இது பிற்காலத்தில் இறையியல் கோட்பாட்டில் உருவாக்கப்பட்ட மிகப் பெரும் வழிகேடாகும். தவறான அடிப்படைகளைக் கொண்ட போதனை நூல்கள் இதை இன்று அரபுக்கல்லூரிகளில் அகீதாப் பாடமாகப் போதனை செய்யப்படுகின்றது. அதற்காக அரபு மத்ரஸாக்களில் نور الظلام மற்றும், جوهرة التوحيد போன்ற நூல்கள் பாடநூல்களாகக் கொள்ளப்பட்டு மாணவர்கள் வழிகெடுக்கப்படுகின்றார்கள். அல்லாஹ்வின் தன்மைகள் யதார்த்தமானவைகள் அல்ல என்பதைப் போதிப்பதற்கு இலங்கையில் இருந்து பாகிஸ்தான் சென்று பட்டம் பெற்று வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. இது நம் நாட்டில் செத்துப்போன பாடத்திட்டங்களில் மடிந்து கிடக்கின்ற பாடநூல்களாகும். காலாவதியான நூல்களையும் கொள்கைகளையும் களைய வேண்டிய பொறுப்பில் உள்ள உஸ்தாதுமார்கள் சிலர் نور الظلام என்ற இருள் நூலுக்கு அரபியில் அணிந்துரை வழங்கி அரபு புத்தக விற்பனை நிலையங்களில் அதைப் பவணிவர வைத்துள்ளனர். அதற்கு அடிக்குறிப்பு எழுதிய மாணவருக்கோ உலகப்புகழ் பெற்ற அறிஞர் பட்டம். இத்தனைக்கும் அதில் இருப்பது ஸக்கஃப் என்ற ஒரு மகா பொய்யனின் பொய்ச் செய்திகளும் விளக்கங்களும்தான் என்பது அணிந்துரையும், மதிப்புரையும் வழங்கிய அந்த மர்கஸ் ஆசான்களின் கண்களுக்கு இன்னும் புலன்படவில்லை என்று நினைக்கின்றேன்.

அரபியில் எதைப் பேசினாலும் ஆமீன் கூறுவது போல அரபியில் நமது மாணவர் அடிக்குறிப்பு எழுதியுள்ளாரே! அதனால் அதற்கு அணிந்துரை என்ன? ஆணி உரையும் கொடுக்க வேண்டும். கொடுத்துவிட்டனர். பாவம் இவர்கள் தாயிக்கள். கழுத்தைக் கொடுத்தாலும் எழுத்தைக் கொடுக்காதே என்று சும்மாவா சொன்னார்கள். இப்போது விசயத்திற்கு வருவோம் அந்த نور الظلام என்ற இருள் நூலின் அடிக்குறிப்பில் என்ன இருக்கின்றது. அதில் அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் பற்றி திரிபுபடுத்தி எழுதப்பட்டுள்ளது. உதாரணமாக அல்லாஹ்வின் பேச்சை எடுத்துக் கொண்டால் அதை அவன் தனது வானவர்களுடன் பேசியதாகத்தான் விளங்க வேண்டுமாம். அடியார்களுடன் அல்ல என்றாம். அப்படியானால் சுவனத்தில் நேரடியான அடியார்களுடன் பேசுவான் என்று வந்திருக்கும் ஹதீஸ்களை என்ன செய்வது? இது அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் பாடப்போதனை போதிக்கின்ற முறையாகும். இவர்களின் அறிவில் இருப்பது போல அல்லாஹ்வும், அவனது தூதரும் அகீதாப்பாடம் போதிக்க வேண்டும் போல.

சுவனவாதிகளுடன் அல்லாஹ் பேசுவது யதார்த்தபூர்வமாகும். அது தொடர்பான செய்தியினை விமரசன நோக்குடன் எழுத நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம்.

كل نص أوهم التشبيها- أوله أو فوض ورم تنزيها

(படைப்புக்கு) ஒப்பாகும் நிலையை தோற்றுவிக்கின்ற அனைத்து சான்றுக்கும், தஃவீல் – மறுகருத்தை- வழங்கிவிடு. அல்லது, அதன் பொளை (அல்லாஹ்விடம்) ஒப்படைத்துவிடு. (அதனால்) தூய்மையை நாடு. என்ற அரபுக் கவிதையின் அடிப்படையில்தான் அகீதாப்பாடப் போதனைகள் நாட்டில் காணப்படும் அரபுக்கல்லூரிகளில் போதிக்கப்படுகின்றன. அல்லாஹ்வின் பண்புகளாக இடம் பெறும் வசனங்களை நிலைப்படுத்துவதால் அவனுக்கு உருவம் கற்பித்தாகும் என்ற விளக்கத்தினை இவர்களாகத்தான் உருவாக்கினர். அதுதான் அகீதாவில் வங்கரோத்து நிலையை இவர்களிடம் தோற்றுவித்தது. படைப்பினங்களுக்கு ஒப்பில்லாத பண்புகள் அல்லாஹ்விற்கு இருக்கின்றன. அதன் வெளிப்படையான பொருள் பற்றி நாம் அறிவோம். ஆனால் அவற்றின் யதார்த்த முறை பற்றி அறியமாட்டோம் என்ற ஆரம்பகால ஸஹாபாக்கள், இமாம்களின் போக்கினைப் போன்று இவர்கள் போதிப்பார்களாயின் அல்லாஹ்வைப் பற்றிய அறியாமை இருள் நாளடைவில் நீங்கிவிடும். சுவனவாதிகளின் நிம்மதிப் பெருமூச்சு மரணத்தின் போதும், அதன் பின்னுள்ள நிலைகளிலும் நிம்மதியான உயிர் துறத்தலும், அச்சமற்ற வாழ்வும் நமக்கு அவசியமானதாகும். மறுமையில் காணப்படும் பீதிகள் பற்றி அறிந்த ஒரு இறைவிசுவாசி இப்படித்தான் நினைப்பான்.

{الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إيمَانَهُم بِظُلْمٍ أُوْلَئِكَ لَهُمُ الأَمْنُ وَهُم مُّهْتَدُونَ} [الأنعام: 82]

எவர்கள் நம்பிக்கை கொண்டு, அவர்களது நம்பிக்கையை அநியாயத்துடன் கலக்கவில்லையோ அவர்களுக்கே (மறுமையில்) பூரண பாதுகாப்பு உண்டு. அவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள் (அல்அன்ஆம்: 82)

இவ்வசனத்திற்கான நடைமுறை மஹ்ஷர் மன்றத்தில் அமுலுக்கு வரும் அதை இறை விசுவாசிகளான முஃமின்களைத் தவிர வேறு எவரும் இந்தப் பாக்கியத்தை அடைந்து கொள்ள மாட்டார்கள் என்று என்பதே இந்த வசனத்தின் பொருளாகும். இந்த வரிசையில்தான் சுவனவாதிகள் பல படி நிலைகளையும் தாண்டி இறையருளால் சுவனத்தில் கால்பதித்ததோடு பின்வருமாறு கூறி அல்லாஹ்வைப் புகழுவார்கள்.

وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنَّا الْحَزَنَ إِنَّ رَبَّنَا لَغَفُورٌ شَكُورٌ (34) الَّذِي أَحَلَّنَا دَارَ الْمُقَامَةِ مِنْ فَضْلِهِ لَا يَمَسُّنَا فِيهَا نَصَبٌ وَلَا يَمَسُّنَا فِيهَا لُغُوبٌ [فاطر : 34 ، 35]

எம்மை விட்டும் துன்கத்தை போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறுவார்கள். நிச்சமாக எமது இரட்சகன் மிக்க மன்னிப்பவனும், நன்றி பாராட்டுவனும் ஆவான். அவன் எத்தகையவன் என்றால் அவனது அருளால் நிரந்தர இல்லத்தை (சுவனத்தை) எமக்கு அவன் ஆகமாக்கினான். அதில் எமக்கு எவ்வித கஷ்டமும் பிடிக்காது. அதில் எமக்கு எவ்வித சோர்வும் ஏறடபடாது என்று அவர்கள் கூறுவார்கள். (ஃபாதிர்: 34-35)

இவ்வாறான பாக்கியத்தை நம்மனைவருக்கும் அல்லாஹ் தந்தருள்வானாக!

One comment

  1. may allah bless everyone with his highest reward!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *