Featured Posts
Home » சட்டங்கள் » ரமளான் » நோன்பு தரும் ஆரோக்கியம்

நோன்பு தரும் ஆரோக்கியம்

அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) -கிழக்குப் பல்கலைக் கழகம்-

ஆரோக்கியம் என்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் (WHOˆ) வழங்கியுள்ள வரைவிலக்கணத்தின்படி ஒருவன் தனது உடல், உள, சமூக மற்றும் ஆன்மீக ரீதியாக அவனது அன்றாட வாழ்வின் நாளாந்த செயற்பாடுகளுக்கு இடையூறற்றவனாக அமையும்போது மாத்திரமே சுகதேகியாகிறான்.

நோன்பானது சமிபாடடைவதற்கு செலவழிக்கின்ற சக்தியை சேமித்து, உடலின் ஏனைய அனு சேபச் செயற்பாடுகளுக்கு அதனை வழங்கி, உடலின் மற்றைய அனைத்து உறுப்புக்களினதும் நஞ்சகற்றல் செயற்பாட்டை தூண்டி, உடலை சுத்தப்படுத்தி திசுக்கள் மற்றும் அங்கங்களை மறுசீரமைக்கின்றது.

லீன் ஞதேவ் எனும் அறிஞர் தனது இயற்கை மாற்றீடுகள்எனும் புத்தகத்தில் ‘நோன்பானது உடலின் இயற்கை நோயெதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் உடற்பாகங்களை தூண்டி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. மேலும், பக்டீரிய எதிர்ப்பு இரத்தக் கலங்களை அவற்றினது திறனில் பல மடையச் செய்கிறது’ எனக் குறிப்பிடுகிறார்.

மேலும், சமிபாட்டுத் தொகுதி ஓய்வெடுக்கும்பொழுது- அதன் உள்வெளி உறையான சீதப்பகுதி- நமது பிழையான உணவுப் பழக்க வழக்கங்களால் பாதிப்புற்றிருந்தால், அதனை மீள ஒழுங்கமைத்துக் கொள்ள ஒரு அவகாசமாய் பயன்படுத்தும்.

அவற்றுடன் உடலின் நஞ்சகற்றும் பிரதான அங்கமாகிய ஈரற் கலங்களும் ஊக்கப்படுத்தப்படும். மேலும் சிறுநீரகம், பெருங் குடல் என்பன இரத்தத்தை சுத்தப்படுத்தும் வேலையை வழமையை விட திறனுடனும் உத்வேகத்துடனும் நோன்பின்போது செய்யும்.. இச் செயற்பாடுகள் உடலில் மேலதிகமாக தேங்கி இருக்கின்ற நீரை அகற்றுவதற்கும், உடலில் படிந்திருக்கின்ற கொழுப்பை கரைப்பதற்கும், குருதிக் கலன்களில் படிந்திருக்கின்ற மேலதிக கொலஸ்ட்ரோல் போன்ற உடலுக்கு பாதிப்பான நஞ்சுகள் அனைத்தும் உடலில் இருந்து வெளியேற்றப்படவும் ஏதுவா அமையும்.

இன்று எம்மை ஆட்டிப் படைக்கும், நீரிழிவு, கொலஸ்ட்ரோல், உயர் குருதி அழுத்தம்போன்றமோசமான நோய்களுக்கு நோன்பு வருமுன் காக்கும் கேடயமாகவே அமைகிறது.

நோன்பை சரியான முறையில் நோற்கும்போது உடல் சம்பந்தமாகவும், உணவுப் பழக்கங்கள் பற்றியும் கவனிக்கத்தக்க விடயங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

நோன்பு காலங்களில் பிரதான உணவு வேளைகள் இரண்டோடு மட்டும் போதுமாக்கிக் கொள்வதே நோன்பின் அடிப்படை நோக்கத்தை அடைவதற்கு ஏற்றதாகும். ஸஹர், இப்தார் என்பனவே அவை. ஸஹரை நாம் கட்டாயம் உட்கொண்டே ஆக வேண்டும். ஸஹர் நேரத்தில் குறிப்பாக எமது நாட்டைப் பொறுத்தவரை வழமையான உணவை (சோற்றை) உன்பதில் தவறில்லை.

ஆனாலும் பாரமற்ற உணவுகளை தெரிவு செய்வதே உகந்ததாகும். சலாது வகைகள், மரக்கறிகள்,பழங்கள் மற்றும் பால் சார்ந்த பொருட்களை உட்கொள்ளலாம். எமது அடிப்படை “எதுவும் அளவுக்கு அதிகமாகக் கூடாது” என்பதே. அளவுக்கு அதிகமாக உண்பவர்களுக்கு நோன்பு பகல் நேரம் கடினமானதாகவும் அசதி நிறைந்ததாகவுமே காணப்படும்.

இப்தார் நேரத்தில் பேரீத்தம் பழமும் பாலும் பாவிப்பதே சிறந்ததாகும். பேரீத்தம் பழம் உடனடி சக்தியை வழங்குவதோடுவிட்டமின் A, B, மக்னீசியம், பொட்டாசியம், பொஸ்பரஸ் போன்றவற்றைக் கொண்டுள்ளது. மேலும் நார்ச் சத்தும் காணப்படுவதால் மலச்சிக்கலை நீக்குவதோடு, கொலஸ்ட்ரோலையும் குறைக்கவல்லது.
பாலில் பல உயிர்ச்சத்துக்கள் அடங்கியுள்ளதோடு, கொழுப்பையும் கொண்டிருப்பதால் பேரீத்தம் பழத்தின் சீனி உறிஞ்சப்படுவதை தாமதப்படுத்தி, இரத்த குருதி குளுக்கோஸின் அளவை சமநிலையில் வைத்திருக்கும்.

ரஸூல் (ஸல்) அவர்களின் இப்தார் பாலும், பேரீத்தம் பழமாகவுமே அமைந்திருந்தது என்பது வியக்கத்தக்கது..அத்தோடு மரக்கறி சூப்புகளையும் சலாதுகளையும் இப்தாரில் சேர்த்துக் கொள்வது சிறப்பானது. எமது நாட்டில் வழக்கத்தில் காணப்படும் ‘கஞ்சி’ சிறப்பான, இலகுவில் சமிபாடடையக் கூடிய பாரமற்ற உணவாகும்.ஆனால், இன்று கஞ்சி உடலுக்கு தீங்கு பயக்கும் அளவை அடைந்து விட்டது கவலைக்குரியது. மிகக் குறைந்த தேங்காய்ப் பாலுடன் மேலும் எண்ணெய், கொழுப்பு குறைத்து அதிக திரவத் தன்மையுடைய கஞ்சியை வரவேற்கலாம்.

மேலும், மேற்குறிப்பிட்ட பலன்களை ரமழானில் அடைய வேண்டுமாயின், அதிக எண்ணெய்யில் பொரித்த மற்றும் ஃபாஸ்ட் ஃபூட் எனப்படும் கடைகளில் விற்கப்படும் தின் பண்டங்களை இயன்றளவு தவிர்ப்பதே சிறந்தது. இரவு நேரம் முழுவதிலும் குறைந்தது 1.5 லீற்றர் நீரையாவது அருந்துவது நல்லது.

இப்தாருக்குப் பின் உடனடியாகத் தூங்க வேண்டாம். முடியுமாயின் சிறிது தூரம் காலாற நடப்பது மிகச் சிறந்ததாகும். உண்மையான முறையில் அதிகம் உண்ணாமல் நீங்கள் நோன்பு நோற்பீர்களாயின், உங்களது உடலில் நஞ்சகற்றப்படுவதற்கான இயல்பான சில அறிகுறிகளை நோன்பின் ஆரம்ப நாட்களில் உணர்வீர்கள்.

குறிப்பாக தலைவலி, அசதி மற்றும் வாய் நாற்றம் என்பன ஏற்படுவதானது, உங்களது உடலில் நஞ்சகற்றல் இடம்பெறுகிறது என்பதற்கான இயல்பான அடையாளங்களாகும். அதிக நீர் மற்றும் பாணங்களை அருந்துவதன் மூலம் இவற்றிலிருந்து மீளலாம்.

அடுத்து மனிதனது உள, சமூக மற்றும் ஆன்மீக ஆரோக்கியத்தில் நோன்பு மிக வெளிப்படையாக பாரிய பங்காற்றுகிறது. மனிதன் தான் விரும்பும் அனைத்தையும் விட்டு விடுவதும், தனிமையிலும் அவற்றை அனுபவிக்காது விடுவதும், அவனது உள்ளத்தில் நாட்ட சக்தி அதிகரிப்பையே காட்டி நிற்கிறது.

மேலும், நோன்பின் ஒழுக்கங்களைப் பேணி நோன்பை நோற்கும்போது, மற்ற மனிதர்களது சமூக உறவைப் பாதிக்கின்ற பொய், புறம், கோள் சொல்லல், வசைபாடல் போன்ற சகல துர்ச் செயல்களிலிருந்தும் விடுபடுகிறான். அத்துடன் அடுத்த மனிதனால் விரும்பப்படுகின்ற, சமூக ஒழுங்கைப் பாதிக்காத ஒருவனாக மாறுகிறான். இவற்றின் மூலம் உள, சமூக நோய்களிலிருந்து அவன் பாதுகாக்கப்படுகின்றான்.

ரமழானைத் தொடர்ந்து வரும் காலங்களிலும், சமூகத்திற்கு ஏற்ற பிரஜையாக வாழ பயிற்றுவிக்கப்படுகிறான். மேலும், ஏழைகளின் பசியை உணர்தல், இல்லாதவர்களுக்கு தனது செல்வத்திலிருந்து வாரி வழங்குதல் போன்ற சமூக பொருளாதார சமநிலையை நோக்கிய சமூக மாற்றத்திற்கும் வழிகாட்டப்படுகிறான்.இவற்றோடு இரவு முழுவதும் நின்று வணங்குதல், பகல் முழுவதும் திலாவத் போன்ற அளப்பரிய நண்மைக்குரிய காரியங்களை அதிகமதிகம் செய்வதன் ஊடாக, ஆன்மீக ரீதியான ஆரோக்கியத்தின் உச்சத்திற்கே சென்று விடுகிறான்.

One comment

  1. Islamkalvi.com is very good

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *