Featured Posts
Home » வரலாறு » இலங்கை முஸ்லிம்கள் » இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் – ஒரு விஷேட பார்வை –

இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் – ஒரு விஷேட பார்வை –

உரை: இத்ரீஸ் ஹஸன் ஸஹ்வி
(சிறிலங்கா தஃவா சென்டர் (SLDC) 01.03.2013 ல் கட்டாரில் நடத்திய இஸ்லாமிய மாநாட்டில் இலங்கையின் சமகால விவகாரம் தொடர்பாக நிகழ்த்தப்பட்ட உரையின் முழுமையான வடிவம் (பல புதிய தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளது)

அன்பின் இஸ்லாமிய உறவுகளே !

இலங்கையின் இன்றைய நிலவரம் மிகவும் பயங்கரமாக இருக்கின்றது. இன்னும் ஒரு மியன்மார் எம் கண்முன்னே கொண்டுவந்து காட்டப்படுகின்றது. உண்மையில் உள்ளம் கனதியாக இருக்கிறது. இது பற்றி நிறையத் தகவல்கள் பரிமாறிக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. அங்கு நடக்கும் பல அநியாயங்களை புட்டுக்காட்ட வேண்டும், ஆனால் நேரம் இல்லாததால் சில விடயங்களை மாத்திரம் தொட்டுக்காட்ட விரும்புகின்றேன்.

இந்த உரையில் மூன்று முக்கிய பகுதிகளை உள்ளடக்க விரும்புகின்றேன்.

ஒன்று: உலக சிறுபான்மை முஸ்லிம்கள் பற்றிய பொதுவான தகவல்கள். இரண்டு: இலங்கை முஸ்லிம்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அதற்கான காரணங்களும். மூன்று: இதை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள்

பகுதி: ஒன்று

சிறுபான்மை என்றால்:

சிறுபான்மை என்றால் யார் என்பதை ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி (The Oxford English Dictionary): ‘இனம், சமயம், மொழி முதலானவற்றில் சமூகத்தின் ஏனையோரிலிருந்து வேறுபட்ட ஒரு சிறு மனித குழுமம்” என்று வரைவிலக்கணப்படுதுகின்றது.

இஸ்லாம் இதை தாருள் இஸ்லாம் தாருள் குப்ர் என வகைப்படுத்தி விளக்குகின்றது. தாருல் இஸ்லாம் என்பது இஸ்லாத்தின் அடிப்படையில் இஸ்லாமியர்களால் நடத்தப்படும் ஆட்சி. தாருள் குப்ர் என்பது இஸ்லாத்தை நிராகரித்தவர்களால் இஸ்லாம் அல்லாத சட்டத்தைக் கொண்டு நடக்கும் ஆட்சி. முஸ்லிம் சிறுபான்மை என்பது தாருல் குப்ரில் வாழும் சிறிய முஸ்லிம் மக்கள் குழுவைக் குறிக்கும். பல்லின சமூகத்தில் வாழ்வதற்கான அனுமதியை இஸ்லாம் வழங்கியுள்ளதுடன், அதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது.

உலக முஸ்லிம் சிறுபான்மை பற்றி சில அடிப்படைத் தகவல்கள்:

அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் Pew (Forum on Religion & Public Life report) ஆய்வு மைய்யம் 232 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வின் முடிவு, இன்று உலக முஸ்லிம் மக்கள் தொகை 150 கோடியைத் தாண்டிக் கொண்டிருப்பதாக குறிப்பிடுகின்றது.

சுமார் 60 நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராகவும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் சிறுபான்மையினராகவும் வாழ்ந்து வருகின்றனர்.

உலக முஸ்லிம் மக்கள்தொகையில் சிறுபான்மையினராக வாழ்வோரின் எண்ணிக்கை 450 மில்லியன் (சுமார் 50 கோடி) என மதிப்பிடப்படுகிறது. மற்றொரு மதிப்பீடு உலக முஸ்லிம்களில் 1/3 பங்கினர் சிறுபான்மை முஸ்லிம்களாக விளங்குகின்றனர் எனக் குறிப்பிடுகின்றது.

இந்த ஆய்வு மையத்தின் முக்கிய பொறுப்பாளர் கூப்பர்மேன் என்பவர் ஒரு முக்கிய விடயத்தினை தெளிவுபடுத்துகின்றார். சில நாடுகள் பற்றி ‘முஸ்லிம்கள் உள்ள நாடுகள்’ என்ற எண்ணமே யாருக்கும் தோன்றாது. ஆனால், அங்கெல்லாம் முஸ்லிம்கள் பெரிய எண்ணிக்கையில் உள்ளனர். இந்தியா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் எடுத்துக்காட்டுகளாகும்.

இந்தியாவில் 16 கோடியே 1 லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர். இது பெரிய அரபு நாடாகக் கருதப்படும் எகிப்து முஸ்லிம்களின் இரு மடங்காகும். ரஷ்யாவில் மொத்த ரஷ்ய மக்களில் 18 வீதம் முஸ்லிம்களாகும். இது ஜோர்தான், லிபியா நாட்டு முஸ்லிம்களின் எண்ணிக்கைவிட அதிகம். தலைநகரில் மட்டும் சுமார் 10 லட்சம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். சீனாவில் 2.2 கோடி முஸ்லிம்கள் உள்ளதாக இந்த ஆறிக்கை தெரிவித்தாலும், 5 கோடிபேர் இருக்கலாம் என்கின்றது இன்னும் சில கணக்கெடுப்புகள். சீனாவிலுள்ள முஸ்லிம்கள் அமைப்பு ஒன்று, சீனாவில் 10 கோடி முஸ்லிம்கள் இருப்பதாகக் குறிப்பிடுகின்றது. அமெரிக்காவில் 80 லட்சம். பிரிட்டனில் 25 லட்சம், ஜெர்மனியில் 40 லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர்.

இரும்புச் சுவர்களால் மறைக்கப்பட்டு ஆட்சி நடத்தப்படும் சீனா போன்ற நாடுகளும் ஏனைய பெரும்பாலான நாடுகளும் தனது சிறுபான்மை இனத்தின் பரம்பலை நேர்மையான முறையில் வெளியிடுவது கிடையாது. இதில் ஊழல், இருட்டடிப்பு என்பன தாராளமாக இடம்பெறுகின்றது. குறிப்பாக முஸ்லிம் பரம்பல் திட்டமிட்ட மறைக்கப்படுகின்றது.

ஆனால் அல்லாஹ்வின் அருள் முஸ்லிம்கள் வாழாத நாடில்லை என்னுமளவு இன்று இஸ்லாம் காட்டுத் தீ போல உலகெங்கும் மிக வேகமாக பரவுகின்றது. உலக வரலாற்றில் பெரும் ஆதிக்கம் செலுத்திய மாதங்கள் வீழ்ச்சிகண்டு வருகின்றன அல்லது முஸ்லிம்களின் வளர்ச்சியின் முன்னால் போட்டி போட முடியாமல் தவிக்கின்றன.

2000 வருடங்களுக்கு மேல் பழமையான கிறிஸ்தவம் 202 கோடி, ஆனால் 1400 வருடங்கள் கொண்ட இஸ்லாம் 150 கொடியை வேகமாகத் தாண்டிவிட்டது. கிறிஸ்த்தவ உலகம் எவ்வளவு திட்டமிட்டு பிரச்சாரம் செய்தும் அதன் வளர்ச்சி மந்தமாகவே உள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் வகுக்காமலே இஸ்லாம் தாறுமாறாக வளர்ந்து கொண்டிருக்கின்றது. அதேபோல் சீனா, ஜப்பான், இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளிலும் ஏனைய உலக நாடுகளிலும் நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்திய பெளத்த மதம் 70 கோடியாகக் குறைவடைந்திருக்கின்றது.

இதுதான் முஸ்லிம்களின் இன்றைய பிரச்சினையின் பிரதான காரணமும் கூட. உலக நாடுகளை இஸ்லாம் கைப்பற்றி விடுமோ என்று, உலகின் ஆதிக்க சக்திகள் பயப்படுகின்றன. இப்பயம் முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைக்கத் தூண்டுகின்றது.

இந்த உம்மத் அந்நியவர்களால் கடுமையாகத் தாக்கப்படும் என்றும் அப்போது நீங்கள் (முஸ்லிம்கள்) அதிகம் பேர் இருப்பீர்கள் என்றும் நபியவர்கள் கூறிய செய்தி இங்கு கவனிக்கத்தக்கதாகும். (ஒரு நீண்ட ஹதீஸின் சுருக்கம்)

Dr. ஜாகிர் நாயக் தனது உரையொன்றில் மேற்கோள் காட்டும் Dr. அடம் பியர்சன் அவர்களின் கூற்றொன்றை இங்கு மேற்கோள் காட்டுவது பொருத்தம் எனக் கருதுகின்றேன்.

” …. அணுவாய்த சக்தி ஒருநாள் அரேபியர்களின் கையில் சிக்கி விடக்கூடும் என்று பயப்படும் மனிதர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள், இஸ்லாமிய பம் (Bomb) ஏற்கெனவே போடப்பட்டுவிட்டது, முஹம்மது நபி பிறந்த ஆண்டே அது நடந்து விட்டது …. ”

பகுதி: இரண்டு

இலங்கை சிறுபான்மை முஸ்லிம்கள்

இலங்கையில் இரண்டு கோடி மக்கள் வாழ்கின்றனர். அதில் 9.7 வீதம் முஸ்லிம்களாகும். (2012 ஆண்டின் கணக்கெடுப்பின் படி)

முஸ்லிம்களின் வரலாறு – இலங்கை முஸ்லிம்களுக்கு 1300 வருடத்துக்கு மேற்பட்ட வரலாறு உண்டு. இதற்கான நிறையச் சான்றுகள் உள்ளன.

இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

வரலாற்று நெடுகிலும் இலங்கை முஸ்லிம்கள் பல இன்னல்களைச் சந்தித்துவந்துள்ளனர். 1814, 1915 காலகட்டத்தில் நடந்த கலவரங்கள் சில உதாரணங்களாகும். சிங்கள இனவாதிகள் செய்த அநியாயங்கள் பற்றிப் பேசும் போது வரலாறில் தீவிர தமிழ் இந்து இனவாதிகள் செய்த அநியாயங்களையும் மறக்காமல் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளோம். யாழ்பாணத்தில் நல்லூர் கோவிலைச் சுற்றி வாழ்ந்த முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயம் தொடக்கம் புலிப் பயங்கரவாதிகள் செய்த அநியாயங்கள் வரை அத்தனையும் வரலாற்றில் மறக்க முடியாதவைகளாகும்.

இன்றையப் பிரச்சினை

அன்மைக்காலாமாக பொது பல சேன (BBS) என்ற பௌத்த தீவிரவாத அமைப்பு ஏனைய பெளத்த தீவிரவாத அமைப்புகளுடன் இணைந்து கொண்டு முஸ்லிம் விரோத பிரச்சாரத்திலும் நடவடிக்கையிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையின் ஊடகங்களையும் காவிப் பயங்கரவாதம் காவுகொண்டுள்ளதால். முஸ்லிம்களுக்கு நடக்கும் அநியாயங்கள் வெளி உலகுக்கு வராமல் புதைக்கப்படுகின்றன. வலையமைபின் திறந்த ஊடகக்கட்டமைப்பு ஊடாக வரும் தகவல்கலில் இருந்தே இலங்கையின் எதார்த்த நிலையை உணர்ந்துகொள்ள முடிகின்றது.

அந்த வகையில் Muslim watch ன் தகவலின் படி 2013 ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெப்ருவரி 28, (2013) வரை 50 க்கு மேற்பட்ட, முஸ்லிம்களுக்கு எதிரான நிகழ்வுகள் பதியப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றது.

  • 25 மேற்பட்ட பள்ளிகள் (மஸ்ஜித்) தாக்கப்பட்டுள்ளது.
  • ஹலால் சான்றிதழ் கடும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
  • அபாயா அனாகரிகமாக விமர்சிக்கப்படுகின்றது.
  • காளி கோட்டுகள் (காதி நீதிமன்றம்) கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
  • இஸ்லாமிய வங்கி முறை பற்றி பேசப்படுகின்றது.
  • முஸ்லிம்களின் தொழில் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுகின்றது.
  • மொத்த முஸ்லிம் தனியார் சட்டமும் கேள்விக்குட்படுத்தப் பட்டுள்ளது.
  • மொத்தத்தில் முஸ்லிம்களின் வாழ்வாதாரமே பயமூட்டப்படுகின்றது. புதிய மியன்மார் ஒன்று நினைவூட்டப்படுகின்றது.

திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம்

  • முஸ்லிம்கள் இலங்கையில் எந்த நீண்ட வரலாறும் அற்றவர்கள்.
  • முஸ்லிம்களிடம் ஆயுதப்படை இருக்கின்றது.
  • முஸ்லிம்களுக்கு மத்தியில் பயங்கரவாதம் வளர்கின்றது, முஸ்லிம்கள் பயங்கரவாதத்துக்குத் துணை போகின்றார்கள். அல்காயிதா, தாலிபான்களுக்கு பண உதவி செய்கின்றார்கள்.
  • முஸ்லிம் சனத்தொகை அதிகரிக்கின்றது
  • மற்ற மதத்தினரை கட்டாய மதமாற்றம் செய்கின்றனர்.
  • என பல போய்ப் பிரசாரங்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் மிகவும் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றது.

வெளிப்படும் வழி (பரப்பும் முறை)

  • ஊடகங்கள் ஊடாக
  • மாநாடுகள் கருத்தரங்குகள் ஊடாக
  • ஆர்பாட்டங்கள்
  • மூலை முடுக்கெங்கும் சுவரொட்டிகள் ஓட்டுவதன் மூலம்
  • நேரடித்தாக்குதல் (பள்ளிகள், வியாபாரத்தளங்கள்)
  • முஸ்லிம் மக்களையும் நேரடியாகத் தாக்கத் தொடங்கியுள்ளனர். (மாத்தறையில் 3 திக்குவல்லை முஸ்லிம் சகோதரிகளுக்கு சில தடியர்கள் தடியடி நடத்தியுள்ளனர், அத்துடன் பர்தா அணியக்கூடாது, பொலிசில் முறையிடக் கூடாது எனவும் எச்சரித்துள்ளனர்.)

எனவே இலங்கையில் முஸ்லிம் விரோத போக்கு என்பது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தப்படுகின்றது.

இலங்கை பிரச்சினையின் பின்னணி என்ன: (ஏன் இந்தத் திடீர் இன வெறி)

சர்வதேச, உள்நாட்டு சமய சமூக அரசியல் பொருளாதார ரீதியான பல காரணிகள் இதன் பின்னணியில் உண்டு.

1. சர்வதேச ரீதியான காரணங்கள்
வரலாற்றில்:

ஆங்கிலயர்கள், இந்த உலகம் தொடர்ந்தும் தங்களையே சாந்திருக்க வேண்டும் என்பதற்காக, தாங்கள் ஆண்ட பூமி எங்கும் பிரித்தாளும் தந்திரத்தை பரப்பிவிட்டுத்தான் வெளியேறினர். அவர்கள் தூண்டிவிட்ட இனத்தை மதத்தை அடிப்படையான நச்சு விதை நாளாந்தம் வளர்ந்து விஸ்வரூபம் எடுத்துகொண்டிருக்கின்றது. இலங்கையையும் அது விடவில்லை.

இன்று:

பிராந்திய வல்லரசுப் போட்டியொன்று நடந்துகொண்டிருக்கின்றது. இலங்கையை தன் கட்டுப்பாட்டியில் வைத்திருப்பது யார் என்பது தான் அந்தப்போட்டி. அமெரிக்கா தூரமாக்கப்பட்டு இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடனான இலங்கையின் இணைப்பு இறுக்கமாகியுள்ளது. அந்தச் சூழலை மாற்ற அமெரிக்கா முயற்சிகின்றது.

அமெரிக்கா இந்த உலகை தனக்கு சாதகமாக்க இரண்டு வழிமுறைகளைக் கையாள்கின்றது. ஒன்று சமாதானப் பொறி அதற்க்கு நோர்வையையும் மற்றது சண்டைப்பொறி அதற்க்கு தனது (ஆயுதக்கிடங்கான) இஸ்ரேலையும் பயன்படுத்துகின்றது. இலங்கையில் இரண்டு பொறிகளும் ஒரே நேரத்தில் கையாளப்படுகின்றது. அதற்க்கு இன்று முஸ்லிம்கள் பலியாக்கப்படுகின்றார்கள்.

அமெரிக்கா, தன் பொறிக்குள் இலங்கையை சிக்கவைப்பதர்க்காக இலங்கையின் சூழலை சீர் குலைக்க கொண்டுவந்துள்ள பொறிக்கும் முஸ்லிம் நாடுகளை தூரமாக்க நோர்வே செய்யும் சதிக்கும் பொது பல சேன (BBS) துணைபோகின்றது. தமிழ் விரோத கருத்தை ஆரம்பத்தில் வெளியிட்ட BBS இன்று முஸ்லிம் விரோத செயற்பாட்டை நோக்கி திசை திருப்பப்பட்டுள்ளார்கள். (BBS வெறும் சர்வதேச கைக்கூலி மட்டுமல்ல உள்நாட்டு அரசின் கைக்கூலியும்தான்)

சர்வதேச ஆயுத வியாபாரிகள் இலங்கையில் யுத்த சூழலை விரும்புகின்றனர்.
பொதுவான முஸ்லிம்களுக்கு எதிரான யூத நாசகாரம், இலங்கை முஸ்லிம்களையும் தொட்டுள்ளது. இஸ்ரேலுடனான இலங்கையின் அண்மைக்கால நெருங்கிய உறவு இதை உறுதிப்படுத்துகின்றன.

2. உள்நாட்டு அரசியல்:

  • தன் அரசியல் நலனுக்காக இனவாத கவசத்தை புதிதாக அணிந்து அதை தூண்டிவிட்ட பெருமை, வேட்டி உடுத்த வெள்ளைக்காரன் ஜூலியஸ் ரிசெர்ட் ஜெயவர்த்தனவைச் (J.R) சாரும். இவர், சமூகத்தில் உறங்கிக் கிடந்த இனவாத உணர்வை மீண்டும் தட்டியெழுப்பிய இலங்கையின் நவீன இனவாதத்தின் தந்தையாவார்.
  • இவர் தூண்டிவிட்ட இனவாதத்தின் விளைவாக கொடிய யுத்தம் மூண்டது, பல உயிர்கள் மாண்டது.
  • ஆனால் சிங்கள அரசியல்வாதிகள் 30 வருடமாக நடந்த யுத்தத்தை வைத்து கதிரை அரசியலை சிறப்பாக நடத்தினார்கள்.
  • ஆனால் சால்வை போத்திய பௌத்தத்தின் தீவிர புத்திரர்கள் யுத்தத்தை முடித்து தன் மொத்தப் பரம்பரையையும் மண்ணின் மன்னர்களாய் மாற்ற திட்டமிட்டனர். அதில் வெற்றியும் கண்டனர்.
  • தனதும் தன் குடுப்பத்தினதும் அரசியல் இருப்புக்காய் இனவாதத்தை ஆயுதமாக எடுத்துள்ளனர். எதிர்காலத்தில் தனி சிங்கள பௌத்தர்களின் வாக்குகளால் தாம் தலைவர்களாகத் தெரிவுசெய்யப்பட வேண்டும் என எதிர்பாக்கின்றனர். அதனால், (BBS வை யார் இயக்கினாலும் அது அரசுக்கு இலாபமே) எதிர்கால அரசியலுக்கு தனி இனவாதம் அவசியம் என மன்னர் குடும்பம் கருதுகின்றது. அதனால் BBS வை போசித்துப் பாதுகாக்க வேண்டிய தேவை இவர்களுக்கு இருக்கிறது.

3. பொருளாதாரம்:
இலங்கையின் வர்த்தகத்துறையை கட்டுப்படுத்துபவர்கள் முஸ்லிகள் தான் என்ற எண்ணமும் அதில் போட்டியும் பொறாமையும் நீண்ட காலமாக நிலவிவருகின்றது. இது இந்தப் பிரச்சினைகளில் பாரிய தாக்கம் செலுத்துகின்றது. வரலாற்றில் சில சிங்கள முஸ்லிம் முரண்பாடுகள் இதனாலேயே இடம்பெற்றுள்ளன. 1814 ல் பத்து முஸ்லிம்கள் தாக்கப்பட்டதை வரலாற்றில் பார்க்கின்றோம், மாவனல்லைச் சம்பவம், சமகால வியாபாரத் தளங்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் என்பன அதன் தொடர்ச்சியே.

4. சமயம்:
உலகில் அதிகரித்து வரும் இஸ்லாத்தின் பாரிய வளர்ச்சியும், முஸ்லிம்களிடம் அதிகரித்துவரும் மார்க்க அறிவும் பற்றும், பௌத்த மதத்தின் வீழ்ச்சியும், சில தீவிர மதவாதிகளுக்கு அச்சத்தை தோற்றுவித்துள்ளது. இந்த அச்சம் கலந்த எச்சரிக்கையால் மத உணர்வில் ஊறிய சில படித்தவர்களும் பாமரர்களும் முஸ்லிம் விரோத உணர்வுக்கு உடன் ஆட்படுகின்றனர்.

இலங்கையின் யுத்தம் இல்லாத சூழல், யுத்தத்தில் பெற்ற வெற்றி இவைகளை சாதகமாகி, இலங்கையின் பல்லினத் தன்மை இல்லாமலாக்கப்பட்டு இலங்கை ஒரு சுத்த பௌத்த தேசமாக வேண்டும் என்ற மதப் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க சிலர் முற்படுகின்றனர். ஏனைய சமூகத்தின் மத அடையாளங்களை வரலாற்றுத் தடங்களை அழிப்பதன் ஊடாக இந்த இலக்கை நோக்கி பாமர மக்களை திசை திருப்புகின்றனர்.

மனிதன், மதவுணர்வு கலந்து தூண்டப்படும்போது அதற்கு இலகுவில் ஆட்பட்டு விடுகின்றான். இலங்கையின் இன்றையப் பிரச்சினையில் இது ஒரு முக்கியமான, அதேநேரம் மிகவும் ஆபத்தான காரணமாகும்.

5. சுயநலம்

BBS மற்றும் ஏனைய தீவிர இனவாத அமைப்புக்களின் தோற்ற வரலாறை உன்னிப்பாக அவதானித்தால் அங்கு அதன் முன்னணியில் நிற்பவர்களின் அரசியல் பொருளாதார சுயநலன் பின்னணியில் இருப்பதை கண்டுகொள்ளலாம்.
விளம்பம், புகழ் யுக்திக்காக இலங்கையின் பல ஊடகங்கள் இனவாதப் போக்குடன் நடந்துகொள்கின்றன, உண்மையை மறைகின்றன, சிறியதைப் பெரிதாக்குகின்றன, நிலைமையை மோசமாக்குகின்றன.

6. முஸ்லிம்களின் நடத்தையும் ஒரு காரணம்:

இதுவும் நியாயமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு உண்மை;
சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத்: கட­ந்த 09.02.2012 வெளியிடப்பட்ட ‘முஸ்லிம் நீதிய’ எனப்படும் தனது நூலின் இறுதிப் பந்தியில் முஸ்லிம்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு இரு பிரதான காரணங்களைக் குறிப்பிடுகின்றார்:

முஸ்லிம்களது வாழ்வில் இஸ்லாமிய போதனைகள் இல்லாமை.
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய தெளிவு இல்லாதிருப்பது.
முஸ்லிம்கள், முஸ்லிம்களாக வாழவில்லை, சர்வதேச மட்டத்தில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும், இஸ்லாத்தை ஒரு பழமைவாதக் கொள்கையாகவுமே அறிமுகப்படுத்தப்படுகின்றது. இத்தப்பபிப்பிராயதைப் போக்கும் வகையில் இஸ்லாத்தைப் பற்றிய சரியான தெளிவை, புரிதலை ஏற்படுத்த வேண்டிய கடமையை முஸ்லிம்கள் சரிவரச் செய்யவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான தீயவர்களின் தூண்டுதலுக்கு பாமர மக்கள் செவிமடுக்க இதுவும் ஒரு காரணமாகும்.

இது தவிர இன்றைய சூழலில்

சில முஸ்லிம்களும் கூட தன் கட்சி, இயக்க நலன்களுக்காக தூரநோக்கற்று, சுயநலத்திற்காக காட்டிக் கொடுக்கின்றனர். உள் விரோதத்ததைத் தீர்க்க இதைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்துகின்றனர்.
மேலும் இஸ்லாம் பற்றித் தெளிவில்லாத, இஸ்லாத்தில் வாழவிரும்பாத சில முஸ்லிம் பெயர்தாங்கிகள், இஸ்லாத்தின் சட்டங்களை விமர்சித்துக் கருத்து வெளியிடுகின்றனர். இதன் மூலம் இஸ்லாத்தைப் பிழையானதாக அடையாளம் காட்டவும், ஏனைய சமூகத்தை பிழையாக வழிநடத்தவும் முற்படுகின்றனர். உதாரணமாக பெண்கள் உடலை மறைத்து அணியும் ஆடை முறை இஸ்லாம் கிடையாது, சவூதி அரேபிய கலாசாரமென்றும் அது தாலிபானிய மரபு என்றும் எழுதியும் பேசியும் வருகின்றனர்.
அண்ணாந்து பார்த்து எச்சு துப்பும் இந்த அனாகரிகத்தை சிலர் செய்துகொண்டிருப்பது வெட்கமும் வேதனையும் நிறைந்த விடயமாகும்.

பகுதி: மூன்று

இப்பிரச்னையை எப்படிக் கையாள்வது (தீர்வுக்கான வழி என்ன):

ஆத்திரங்கள் ஒருபோதும் பிரச்சினைக்கு தீர்வாகாது. குறிப்பாக சிறுபான்மைச் சூழலில்
வலிந்து எம்மை சண்டைக்கிளுத்து எமக்கு பெரும் அழிவொன்ரை உண்டுபண்ணப் பார்க்கின்றார்கள். எமது சமூகம் நியாயமான பொறுமையை கையாண்டுள்ளார்கள். இன்னும் கையாண்டு கொண்டிருகின்றார்கள். அல்லாஹ்வின் உதவியால் இது தொடரவேண்டும்.

இன்றைய சூழலைக் கட்டுப்படுத்துமாறு நான் அரசிடமே கோர வேண்டும். ஏனெனில் நாட்டின் யாப்புக்கு விரோதமாக நடப்பவர்களை கட்டுபடுத்துவது அரசின் கடமையாகும்

  • இலங்கை அரசியலமைப்பின் பத்தாம் பிரிவு விரும்பியவர் விரும்பிய மதத்தை, கொள்கையைத் தெரிவு செய்து வாழும் உரிமையைப் பற்றிப் பேசுகின்றது
  • இலங்கை அரசியலமைப்பின் 12 ம் பிரிவின் இரண்டாம் பந்தி சகலருக்கும் சமவுரிமை (Right to equality) பற்றிப் பேசுகின்றது.
  • 12 ம் பிரிவின் 2 ம் பந்தி இன மத அடிப்படையிலான பாரபட்சத்தை எதிர்த்துப் பேசுகின்றது
  • இலங்கை அரசியலமைப்பின் 14 ம் பிரிவு பேச்சு, கூட்ட, சங்க, குடியேற்ற, இயக்க சுதந்திரம் பற்றிப் பேசுகின்றது
  • இலங்கை அரசியலமைப்பின் 9 ம் பிரிவு பௌத்த மதத்துக்கான முன்னுரிமை பற்றிப் பேசும் அதே நேரம் ஏனைய மத சுதந்திரத்துக்கான உத்தரவாதத்தினையும் வழங்குகின்றது.
  • மேலும் போய்ப் பிரச்சாரம், மத நிந்தனை என்பன சட்டம் குற்றம் என்கின்றது.

இப்படி யாப்பு ரீதியாக உத்தரவாதப்படுதப்பட்டுள்ள ஒரு சமூகத்தின் உரிமையை, ஒரு சிறு குழு கேள்விக்குட்படுத்துவதையும், சமூகங்களுக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவித்து, சமூக அமைதியைக் குழைக்க முற்படுவதையும் ஒரு நீதியான அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

  • உளவுத்துறை, முஸ்லிம்கள் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கிடையாது, அவர்களிடம் அத்தகு முன்னெடுப்புக்கள் எதுவும் இல்லை என்கின்றது. ஆனால் BBS அமைப்பினர் முஸ்லிம்களிடம் ஆயுதக் குழுக்கள் உள்ளது என்று பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர், முஸ்லிம் மத அனுஸ்ட்டானங்கள், அடையாளங்களை அவமதித்து பகிரங்க மேடைபோட்டுப் பேசுகின்றனர். பள்ளிவாசல்களை மற்றும் வியாபாரத் தளங்களைத் தாக்குகின்றனர், இன்னும் ஒரு படி மேல் போய் மனிதர்களையும் தாக்கத் தொடங்கியுள்ளார்கள்.

இப்படி, ஒரு சமூகத்தின் மத விவகாரங்களில், உரிமையில் தலையிடுவது அரசின் ஊடகப் பேச்சாளர் சொல்வதுபோல் ஜனநாயக உரிமையோ கருத்துச் சுதந்திரமோ கிடையாது. தெட்டத் தெளிவான ஜனநாயக, மனித உரிமை மீறளாகும். இது சட்ட ஒழுங்குப் (LAW and ODER) பிரச்சினையாகும். இதைக் கட்டுப்படுத்துவது அரசின் கட்டாயக் கடமையாகும்.

  • எனவே அரசாங்கத்துக்கு எம் பிரச்னையை காதிரமாய் ஒருமித்த குரலில் முன்வைக்க வேண்டும்
  • இதை அரசு கேட்டே ஆக வேண்டும் எனும் சூழலை ஜனநாயக வழிமுறைப் போராட்டத்தின் மூலம் உண்டுபண்ண வேண்டும்.
  • இந்தப் போராட்டத்தில் அனைவரையும் இணைத்துக்கொள்ள வேண்டும். (மாற்று மத சகோதரர்கள், கட்சிகள், மற்ற மனித உரிமைப் போராளிகள்)
  • முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம் (Muslim lawyers association) சட்டப் போராட்டத்தை செய்ய வேண்டும். இக்கட்டத்தில் தனது சமூகத்துக்காக இதை அவர்கள் செய்வது அவர்களின் தார்மீகக் கடமையாகும். முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆவணப்படுத்தல் அதை சட்ட ரீதியாக எதிர்கொள்ளல் எம்மைக் காக்கும் போராட்டத்தின் கட்டாய அம்சங்களாகும்.
  • ஏனைய புத்திஜீவிகள் சமூகம் (professional bodies) தன் துறை சார் புலமை ஊடாக முடியுமான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
  • இன்றைய உலகில் ஜனநாயகப் போராட்டத்தில் மிகவும் வலிமையான ஆயுதம் ஊடகமாகும்.
  • எனவே முஸ்லிம் எழுத்துலகப் பேனா தூக்கிய போராளிகளே ஊடகவியலாளர்களே உங்கள் ஆங்கில, சிங்கள, தமிழ் புலமையை காட்டுங்கள். எம் சமூகத்தைக் காக்கும் கடமையை செய்யுங்கள். ஊடகங்களுக்கு சரியான தகவல்களை வளங்குங்கள். (அல்ஜஸீரா போன்ற நிறுவனங்கள் இன்னும் இலங்கை முஸ்லிம்களை கண்டுகொள்ளாமல் இருக்கக் காரணம் சரியான தகவல் போய்ச் சேராமையும் ஒரு காரணம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.)
  • முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட, வலுவுள்ள இஸ்லாமிய நாடுகளுக்கும் ஒரு பெரும் கடமையுண்டு. அது அல்லாஹ் அல்குர்ஆனில் (4:75) குறிப்பிடுவது போன்று வலுவிழந்த, பாதிக்கப்பட்ட சமூகத்தைப் பாதுகாக்கும், கைகொடுத்து உதவும் கடமையாகும். இதை அவர்கள் செய்ய வேண்டும்.
  • முஸ்லிம் நாடுகள் தன் கடமையை செய்யும் வகையில் அவர்களுக்கு தெளிவான தகவல்கள் வழங்குவது இலங்கை முஸ்லிம்களின் கடமையாகும்.
  • முஸ்லிம் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தும் பணியை செய்ய வேண்டும். இதை வெளிநாடுகளில் வாழும் முஸ்லிம்கள் செய்ய முடியும். எமது பிரச்சினைகளை ஆங்கிலம் மற்றும் அரபு மொழியில் ஆவணப்படுத்தி உரிய இடங்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும். இன்றுள்ள வலுவான போராட்ட யுக்திகளில் இதுவும் ஒன்றாகும்.
  • தமிழ் மக்களின் போராட்டத்தை சர்வதேசமயப்படுத்தி இலங்கைக்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் புலம்பெயர் தமிழர்களாகும். இலங்கை அரசு வெளியுலகில் தலைகாட்ட முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளனர். புலம்பெயர் தமிழர்கள் போல் நாடு கடந்து வாழும் முஸ்லிம்கள் பெரும் அழுத்த சக்தியாக மாறமுடியும்.
  • இலங்கை முஸ்லிம்கள் தொடர்பாக சவுதியில் தமிழ் தஃவா அமைப்புக்கள் கூடி ஆராய்ந்துள்ளனர், கட்டாரில் உள்ள இலங்கை தஃவா அமைப்புக்கள் ஒன்றுகூடி ஆராய வேண்டும். (இப்படி ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள முஸ்லிம் அமைப்புக்கள் தான் வாழும் நாடுகளில் ஒன்றுகூடி ஆராய்வதுடம் ஒரு வலுவான சர்வதேச வலையமைப்பை உண்டு பண்ண வேண்டும். அந்த வலையமைப்பின் ஊடாக ஒருமித்த மிகவும் ஆக்கபூர்வமான செயற்பாட்டை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும், இன்ஷாஅல்லாஹ்)
  • இலங்கையில் சமயங்களுக்கிடயிலான கலந்­து­ரை­யா­டல்­க­ள் (Interfaith Dialogue) அதிகம் நடத்தப்பட வேண்டும். முரண்பாட்டு முகாமைத்துவத்திற்கும் (Conflict management), சமூக நல்லிணக்கத்தினை (Social Harmony) மேன்படுத்தவும் இது சிறந்த வழி என்பது இஸ்லாத்தின் கருத்தாகும். இன்றைய சமூகவியலாளர்களும் இக்கருத்தை மிகவும் வலியுறுத்துகின்றனர். .

போராட்ட அணுகுமுறை:

சிறுபான்மை சூழலில் எமது போராட்ட முறை மிகவும் தெளிவாகவும், அறிவுபூர்வமாகவும், ஆதாரபூரவமாகவும் ஜனநாயகபூர்வமாகவும் இருக்க வேண்டும். வீர வசனங்களோ, பதிலுக்குப் பதில் பேசும் துவேச வார்த்தைகளோ, தெருச் சண்டைகளோ பிரச்சினைக்குத் தீர்வு கிடையாது. மாறாக, அவை பிரச்சினையைத் தீவிரப்படுத்திவிடும் காரணிகளாகும்.

உடனடியாகச் செய்ய வேண்டியவை

முஸ்லிம்களுக்கு எந்த ஒரு சிறு அசம்பாவிதம் நடந்தாலும் அவை:

உடன் போலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செயப்படுவதுடன், மனித உரிமைப் பாதுகாப்பு அமைப்புக்கள், நிலையங்களிலும் பதியப்பட வேண்டும்.
ஊடகங்களுக்கு, குறிப்பாக முஸ்லிம் ஊடகங்களுக்கு தகவல்கள் வழங்கப்பட வேண்டும்.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள், ஏனைய அரசியல்வாதிகள், மாற்றுமத நியாயமான அரசியல்வாதிகள், சிவில் சமூகத் தலைவர்கள் அனைவருக்கும் தகவல்கள் ஏற்றிவைக்கப்பட வேண்டும்.
இவர்களூடாக அரசின் உயர்மட்ட உறுப்பினர்கள் உரிய அதிகாரிகளுக்கு செய்திகள் சேர்ப்பிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கத் தூண்டப்பட வேண்டும்.
வெளிநாட்டு தூதுவராலயங்கள் குறிப்பாக முஸ்லிம் நாடுகளின் தூதுவராலயங்களுக்கு உடன் தகவல்கள் ஏற்றிவைக்கப்பட வேண்டும்.

அடுத்து:

  • பிழையான கற்பிதங்களுக்கு தெளிவான பதில்கள் வழங்கப்படவேண்டும்

முஸ்லிம் வரலாறு: திரிக்கப்படும் மறைக்கப்படும் முஸ்லிம் வரலாறு தெளிவுபடுத்தப்பட வேண்டும். இலங்கை முஸ்லிம்கள் வெறும் 200, 300 வருட வரலாறே கொண்டவர்கள் எனக் கூறி ஒரு மாபெரும் வரலாற்றுத் திரிபை உண்டுபண்ணப் பார்க்கின்றனர்.

முஸ்லிம்கள் இலங்கையில் 1300 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டவர்கள். இதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. உதாரணத்துக்கு ஒன்றைக் குறிப்பிடலாம் காலியில் உள்ள கச்சு வத்த என்ற இடம், இதன் உண்மையான பெயர் ஹஜ்ஜு வத்தையாகும். (ஹஜ்ஜுக்கு செல்லும் முஸ்லிம் மக்கள் இங்கு இருந்துதான் 1300 களில் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக வரலாறு கூறுகிறது) இது 1300 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட இடம் என பேராசிரியர் அனஸ் போன்றோர் குறிப்பிடுகின்றனர். இது போன்ற பல ஆதாரங்கள் தொகுக்கப்பட்டு இன்று ஆவணமாக்கப்பட்டுள்ளது. இவைகள் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

முஸ்லிம்களின் வளர்ச்சி விகிதாசாரம்:
இலங்கையில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட மதப்பிரசாரம், கட்டாய மதமாற்றம் காரணமாக இலங்கை முஸ்லிம்களின் விகிதாசாரக் கட்டமைப்பு அதிகரித்து வருகின்றது என்றும், 2020, 2031 களில் இலங்கை முஸ்லிம் நாடாகப் போகின்றது என்றும் பிரச்சாரம் செய்கின்றார்கள். இலங்கையின் 1981- 2011 வரையான சமூக வளர்ச்சியில் சிங்களவர்களின் வளர்ச்சி – 38.4 வீதம், தமிழர்களின் வளர்ச்சி – 35.5 வீதம், முஸ்லிம்களின் வளர்ச்சி – 76.4 வீதம் என்ற ஒரு கணக்கை காட்டி இதன்பின்னணியை திரிபுபடுத்தி சிங்கள மக்களை அச்சாமூட்டுகின்றனர்.

இலங்கையின் 1911 இனப்பரம்பல் கணக்கெடுப்பின் படி சிங்களவர்கள் – 60.25 வீதம், தமிழர்கள் – 22.85 வீதம், முஸ்லிம்கள் – 6.91 வீதமாகும். அதேநேரம் இலங்கையின் 2012 ம் ஆண்டின் அண்மைய இனப்பரம்பல் கணக்கெடுப்பின் படி சிங்களவர்கள் – 70.19 வீதம், தமிழர்கள் – 12.61 வீதம், முஸ்லிம்கள் – 9.7 வீதமாகும்.

1911 – 2012 வரையான நூறு வருடத்தில் சிங்களவர்கள் – 10 வீதத்தினால் அதிகரித்துள்ளனர், தமிழர்கள் – 10 வீதத்தால் குறைந்துள்ளனர், முஸ்லிம்கள் வெறும் – 2 வீததால் மட்டுமே அதிகரித்துள்ளனர்.

கொடிய யுத்தத்தினால் தமிழ் சமூகதில் பலர் உள்நாட்டில் செத்து மடிந்தும் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தும் போனதால் அவர்களின் விகிதாசாரம் வீழ்ச்சிகண்டதன் விளைவு முஸ்லிம் விகிதாசாரம் சற்று உயர்வுகண்டுள்ளது. அதுவும் வெறும் இரண்டு வீதத்தால். இதை மதத்துடன் இணைத்து சில பிக்குகள் பிழையாகப் பாடம் நடத்துகின்றனர். சமூகத்தையும் பிழையாக வழிநடத்துகின்றனர். இதுவும் திறந்த ஊடகங்கள் வாயிலாகத் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

வியாபாரம் தொடர்பாக :
1911 ம் ஆண்டின் இலங்கையின் வியாபாரிகள் கணக்கெடுப்பின்படி, சிங்கள வியாபாரிகள் தொகை 51020, தமிழ் வியாபாரிகள் தொகை 19850, முஸ்லிம் வியாபாரிகள் தொகை 29239 ஆகும். இதில் வெளிநாட்டு (Arrivals) முஸ்லிம் வியாபாரிகளின் தொகை 18037 ஆகும். சுதேச முஸ்லிம் வியாபாரிகள் உள்நாட்டு வியாபாரிகளில் வெறும் 11 வீதம் மட்டுமேயாகும். இதன் படிமுறை வளர்ச்சி விகிதாசாரமே இன்றுள்ளது.

இந்த விடயங்கள் சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

ஒன்றை மட்டும் தெளிவாய்ப் புரிந்துகொள்ள வேண்டும்

குட்டக் குட்ட குனிந்துகொண்டிருக்க நாம் ஒன்றும் கொள்ளைப் புறத்தால் இந்த நாட்டில் குடியேறியவர்கள் கிடையாது. சிறுபான்மை என்றால் அடிமை சமூகம் என்று அறுத்தமும் கிடையாது. இந்த நாட்டில் நாமும் ஒரு அங்கம், எமக்கான தனியான தெளிவான வரலாறு உண்டு, நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியுளோம், நாட்டுக்காக பல தியாகங்கள் செய்துள்ளோம் (நடந்த யுத்தத்தில் 3500 மேற்பட்ட உயிர்ப்பலி, உடமை இழப்பு, 133000 மேற்பட்ட வட முஸ்லிம்கள் 23 வருடங்களாக துயரமான அகதி வாழ்க்கை, இப்படிப்பல…)

இந்நாட்டில் நாம் தலைநிமிர்ந்து வாழும் சகல தகுதியும் எமக்குண்டு. இதில் தலையிடுவோரை தட்டிக்கேட்கும் உரிமையும் எமக்குண்டு. அநியாயத்திற்கு எதிராகப் போராடித்தான் ஆகவேண்டும்.

எமக்கதிரான அநியாயங்களுக்கு எதிராகப் போராடுவது யார் ?

நவீன கால அறிஞர் அஷ்ஷெய்க் அல்கஸ்ஸாலி அவர்களின் கருத்தொன்ரை இங்கு குறிப்பிடுவது பொருத்தம் என நினைக்கிறேன்:

“இஸ்லாம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பக்கமே நியாயமிருக்கிறது. ஆனால் அதற்கு சார்பாக வாதிடும் வழக்கறிஞர்கள்தான் கையாலாகதவர்களாக இருக்கின்றார்கள்”

என்கிறார்.
இது இலங்கை முஸ்லிம்களுக்கும் அதன் கையாலாகாத தலைவர்களுக்கும் மிகவும் பொருந்தும் உதாரணமாகும்.

பாதிக்கப்படும் சமூகத்தின் பொறுமை ஒரு எல்லை வரைதான் நின்றுபிடிக்கும். ஒரு கவிஞ்சன் சொன்னது போன்று;

தாக்குண்டால் புழுக்கள் கூடத் தரைவிட்டுத் துள்ளும்

கழுகு தூக்கிடும் குஞ்சி காக்கத் துடித்தெழும் கோழி

சிங்கம் மூர்க்கமாய்த் தாக்கும்போது முயல்கூட எதிர்த்து நிற்கும்

இது இயல்பூக்கம், தவிர்க்க முடியாது. தொல்லைகள் எல்லை மீறும்போது பொறுமையும் எல்லைமீறும். எனவே பாதிக்கப்படும் பாமரமக்கள் தன்னைக்காக்கும் போராட்டத்தை, தன் கைகளில் எடுப்பார்கள், அது அனைவருக்கும் அனுகூலமாய் அமையக்கூடும். அந்நிலை வருமுன் எமது ஜனநாயகப் போராளிகள், தன் ஜனநாயக வழிமுறைப் போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும். மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் தெளிவான வலிமையான போராட்டத்தை சட்டதிற்குற்பட்ட வகையில் முன்னெடுத்தே ஆகவேண்டும்.

ஆட்சியாளர்களின் சால்வைகளில் தொங்கிக்கொண்டிருக்கும், சமூகத்தை வித்துத் தின்னும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் மௌனம் கலையக் காலமெடுக்கும். (அதற்கொரு தேர்தல் வரவேண்டும்) அதுவரை சமூக அவலம் காத்திருக்காது. எனவே முஸ்லிம் புத்திஜீவிகள், சிவில் சமூகம், ஊடகவியலாளர் சமூகம், சட்டத்தரணிகள் சங்கம், புலம் பெயர் சமூகம் என்பன ஒன்றிணைந்து அவசரமாய் தன் கடமையைச் செய்ய வேண்டும். நிச்சயம் அல்லாஹ்வின் உதவி கிட்டும்.

“உலகம் கடுமையான வேதனையால் தவிக்கின்றது. அநியாயக் காரர்களின் அடாவடித்தனங்களால் அல்ல, மாறாக நல்லவர்களின் மௌனத்தின் காரணமாக..!!” -நெப்போலியன்-

தொகுப்பு: SLDC Qatar, Media unit.

One comment

  1. இலங்கையே நாங்கள் இதுவரை சிங்களா நாடக பார்க்கவில்லையே அது எங்கள் சொந்த மன்னாகா தானே இதுவரை பார்க்கிறோம் . உலகெங்கும் வாணிபம் செய்து பொருள்ளிட்டி இலங்கையே தரமான நாடாக ஆக்கிணோமே எங்களுக்கா இந்த நிலை
    புரிகிறது எங்களுக்கு உண்மை புரிகிறது
    புலிகளை அப்புரபடுத்திவிட்டிர்கள் .தமிழர்களை
    இனபடுகொலை செய்துவிட்டிர்கள்
    மீதம் இருப்பது இஸ்லாமியர்கள் மட்டும்தான்
    மியன்மாரில் செய்வது போல் இலங்கையிலும் செய்யலாம் என்று கணவு காணாதிர்கள் . இஸ்லாம் அமைதி யே போதிக்கின்ற மார்க்கம்
    இதுவரை நல்ல ரீதியில் போராடிக்கொண்டு இருக்கிறோம்
    குட்டக் குட்ட குனிந்துகொண்டிருக்க நாம் ஒன்றும் கொள்ளைப் புறத்தால் இந்த நாட்டில் குடியேறியவர்கள் கிடையாது. சிறுபான்மை என்றால் அடிமை சமூகம் என்று அறுத்தமும் கிடையாது. இந்த நாட்டில் நாமும் ஒரு அங்கம், எமக்கான தனியான தெளிவான வரலாறு உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *