Featured Posts
Home » வரலாறு » இலங்கை முஸ்லிம்கள் » இலங்கையிலும் இஸ்லாமோ போபியா

இலங்கையிலும் இஸ்லாமோ போபியா

– அஷ்ஷெய்க் அன்வர் இஸ்மாயீல் (ஸலபி) –கிழக்குப் பல்கலைக் கழகம் –

இன்று இஸ்லாமிய உலகிலும் மேற்கிலும் ஏற்பட்டிருக்கும் நவீன இஸ்லாமிய எழுச்சியின் வேகமான அலைகள் உலக மக்களை அதனை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. குறிப்பாக மேற்குலகில் மிக வேகமாக மனித உள்ளங்களை வசீகரித்து வரும் மார்க்கமாக இஸ்லாம் மாறியிருப்பது அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயங்களையும் விரோதப் போக்காளர்களையும் ஆத்திரம் கொள்ளச் செய்துள்ளது.

இதன் விளைவாக கிறிஸ்தவப் பாதிரிகளும் மேற்குலகின் சில அறிஞர்களும் (?) இஸ்லாம் குறித்து போலியான கருத்தியல்களை முன்வைப்பதோடு முஸ்லிம்களை கொடூரமானவர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் காட்ட முனைந்து வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளினால் Islamophobia எனப்படும் கருத்தியல் மேற்குலகால் கட்டமைக்கப்பட்டது.

மேற்குலகில் பரவிவருகின்ற அல்லது கட்டமைக்கப்பட்டிருக்கின்ற இஸ்லாமியப் பீதியின் பரிபாஷைக் கருத்தாகவே இது காணப்படுகின்றது. Islamophobia என்ற சொல் பீதி அச்சம் நோய் பயம் போன்ற கருத்துக்களைக் கொண்ட ஒரு கிரேக்க சொல்லாகும். 2011/09/11 இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின் மேற்குலகில் உருப்பெற்ற கருத்தியலாகவும் இதனை அடையாளப்படுத்த்தலாம்.

Islamophobia வானாது முஸ்லிம்களை மதத் தீவிரவாதிகளாகவும் இரக்கம் பண்பாடு என்பனவற்றை அறியாத மனித சமுதாயத்திற்கு எதிரான சமத்துவம்,மன்னிப்பு போன்ற மனித பண்புகளுக்கு விரோதமானவர்களாகவும் சித்தரிப்பதைக் குறிக்கின்றது.

இவ்வாறான கட்டமைப்பை மேற்கொள்வதன் மூலம் மேற்கு மக்களின் உள்ளங்களில் இஸ்லாம் பற்றிய மோசமான பிம்பங்களை கட்டமைக்கின்றது. முஸ்லிம்களின் உள்ளங்களில் மேற்கை வெல்ல முடியாது, அதனுடன் போராட முடியாது, அது அசைக்க முடியாத சக்தி போன்ற மாயையை உருவாக்குகிறது. இதுதான் நவீன காலப் போர் முறையாகும்.

மூன்று தசாப்தகால போருக்குப் பின்னரான இலங்கையில் இனமதவாத சிங்கள பெளத்த கடும்போக்கு சக்திகள் இலங்கை முஸ்லிம் சமூகத்தை உளவியல் ரீதியில் பலவீனப் படுத்தி தாம் அடையத்துடிக்கும் இலக்குகளை எட்டிவிட முஸ்லிம் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறமை இலங்கையிலும் இஸ்லாமோ போபியா தீவிரமாக பரவிவருகின்றமையே பிரதிபலிப்பதாக அமைகின்றது.

இனமதவாத சிங்கள பெளத்த கடும்போக்கு சக்திகள் முஸ்லிம் நிறுவனங்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் எந்தவித ஆதாரங்களும் இன்றி சோடிக்கப்பட்ட குற்றசாட்டுகளை முன்வைத்து அதை தளமாக கொண்டு நாட்டில் ஒரு பெரிய அரசியல் சக்தியாக எழுந்து நின்று சிறுபான்மையினரை குறிப்பாக முஸ்லிம்களை அடக்கிவைக்க முற்படுகிறது.

இவர்கள் ஒரு சிறிய குழுவினர்தான் என்பதையும் பெரும்பாலான பௌத்தர்கள் முஸ்லிம் எதிர் பிரசாரத்தை செய்யவில்லை. என்பதையும் இவர்கள் நாட்டில் பெரும்பானான பௌத்தர்களின் குரல் அல்ல என்பதையும் அவர்கள் இந்த நாட்டில் அரசாங்கமும் அல்ல என்பதையும் முஸ்லிம்கள் மறந்துவிடக் கூடாது. இவர்கள் நாட்டில் பல மாற்றங்களை வேண்டி நிற்கிறார்கள் ஒன்று இந்த நாடு முழுமையான பெளத்த தேசமாக மாறவேண்டும். நாட்டின் பெயர் கூட சின்ஹல என்று மாற்றப்பட்ட வேண்டும் நாட்டின் தேசிய கொடி தனி சிங்களவர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் சிங்கத்தை மட்டும் கொண்டிருக்க வேண்டும். தேசிய நிகழ்வுகளில் பௌத்தம் மட்டும்தான் மதமாக இருக்கவேண்டும். நாட்டின் சிறுபான்மையினர் தாம் விரும்பி தருவதை பெற்றுகொண்டு அடங்கியிருக்க வேண்டும். என்று கனவு காண்கிறார்கள்.

இவர்கள் குழு அளவில் இருந்தாலும், புலிகளின் அழிவின் பின்னர் நாட்டில் தமது அரசியல் இருப்பை தக்க வைத்துகொள்ள துடிக்கும் இனவாத அரசியல் செய்து ஆட்சியாளர்கள் தரப்பில் அமைத்திருக்கும் ஒரு அரசியல் சக்தியின் செல்லப் பிள்ளைகள் என்பது கவனிக்கப் படவேண்டும். இவர்கள் சிறிய குழுவாக இருந்தாலும் அவர்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்க்கும்போது ஓரளவு பலமான வேகமான ஒழுங்கமைப்புக்கு உட்பட்டுவரும் குழு என்பதும் புலனாகும்.

பௌத்த கடும்போக்குவாதம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள்
இலங்கையில் அல்கைதா தாலிபான் அமைப்புக்கள் செயற்பட்டுவருவதாக குற்றம் சாட்டுகிறது. 10 இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கள் இருக்கிறது என்கிறது. நாட்டில் நிர்மாணிக்கப்படும் மஸ்ஜித்துக்கள் எல்லாம் ஜிஹாத்திய பங்கர்கள் என்கிறது சிறுவர்களுக்கு மதரஸாக்களில் அடிப்படைவாதம் போதித்து எதிர்காலத்தில் ஜிஹாத் செய்ய தயாராக்குகிரார்கள் என்கிறது. தாடிவைத்து மீசையை கத்தரித்தவர்கள் தீவிரவாத முஸ்லிம்கள் என்கிறது , இலங்கையில் 12 ஆயிரம் ஆயுதப் பயிற்சி பெற்ற முஸ்லிம்கள் இருப்பதாக கூறுகிறது. இலங்கையில் அபாயாக்கள், புர்காக்கள் அதிகரித்து வருகிறது, ஷரிஆ சட்டத்தை இலங்கையில் நடைமுறை படுத்தப் போகிறார்கள் என்கிறது. அரசியல் தளத்தின் ஏற்கனவே நுழைந்து விட்ட இஸ்லாமிய அடிப்படைவாதம் இலங்கையின் பொருளாதாரத்தின் உள்ளும் ஊடுருவுகிறது அதன் வெளிப்பாடுகள்தான் நாட்டில் வேகமாக பரவிவரும் இஸ்லாமிய வங்கி முறைகள் மற்றும் ‘ஹலால்’ திணிப்பு என்கிறது. இலங்கையில் அனைத்து பிரஜைகளுக்கும் ஒரு சட்டம் இருக்கும்போது முஸ்லிம்களுக்கு மட்டும் முஸ்லிம் தனியார் சட்டம் அரசியல் யாப்புக்கு முரணானது என்கிறது.

முஸ்லிம்கள் நாட்டில் பூனை மற்றும் பன்றி குட்டிகள் போடுவதை போன்று அதிகமாக பிள்ளைகளை பெற்று பெருக்கம் எடுக்கிறார்கள். இது நாட்டில் சிங்களவர்களை சிறுபான்மையாக்கி விடும் முஸ்லிகள் பௌத்தர்களை முஸ்லிம்களாக மாற்றி வருகிறார்கள். கிட்டிய எதிர்காலத்தில் இலங்கை இஸ்லாமிய நாடாகிவிடும் என்கிறது. தென்கிழக்கு பல்கலைகழகம் முஸ்லிம் தீவிரவாதத்தின் தொட்டில் என்கிறது. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகி விட்டார்கள் புலிகள் சாதிக்க முடியாது போனதை இவர்கள் சாதிக்கப் போகிறார்கள் என்கிறது. முஸ்லிம்கள் இந்த நாட்டில் நீண்ட வரலாரற்றவர்கள் பொய்யான வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்கிறது. முஸ்லிம் கடைகளில் சிங்கள பௌத்தர்கள் கொள்வனவு செய்யவேண்டாம், சாப்பிட வேண்டாம் முஸ்லிம்கள் இரசாயங்களை கலந்து சிங்கள் பௌத்தர்களை மலடர்களாக ஆக்குகிறார்கள் என்கிறது. (இந்தப் பின்னணியில்தான் அண்மையில் அளுத்கம தொட்டு பானதுரை வரையிலான இனவாதிகளின் நாசகார செயற்பாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது)

இந்த குற்றச்சாட்டுக்களின் ஊடாக இந்த பெளத்த கடும்போக்கு வாதிகள் ஒரு தெளிவான செய்தியை முஸ்லிம் சமூகத்துக்கு தருகிறார்கள். அதுதான் இந்த நாடு பெளத்த தேசம், இது பௌத்தர்களின் தேசம், இங்கு முஸ்லிம்கள் அண்மையில் வந்தவர்கள் நாட்டின் சொந்தக்காரர்கள் நாங்கள்தான் முஸ்லிம்கள் இந்த தேசத்தில் மட்டுப் படுத்தப் பட்ட உரிமைகளுடன்தான் வாழவேண்டும். சுருட்டிக்கொண்டு இருக்கவேண்டும் தவறினால் உங்களுக்கு எதிராக நாங்கள் வருவோம் என்பதுதான் அந்த செய்தி. அந்த செய்தியை பெளத்த கடும்போக்கு மேலாதிக்க வாதிகள் இப்படி செல்கிறார்கள் இது ஒரு பெரும்பான்மை பெளத்த நாடு. ரப்பர் தோட்டத்தில் பிரதானமானது இறப்பர். எனினும் அங்கு மரக்கறி, கீரை வகைகளும் இடை நிலை பயிராக பயிரிடப்படும். அவ்வாறுதான் இங்குள்ள முஸ்லிம்கள் அதனை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் .சிறுபான்மை முஸ்லிம்கள் பெளத்த நாட்டின் பெளத்த கலாசாரத்தை ஏற்றுக்கொண்டுதான் வாழவேண்டும் என்று சொல்லித்தருகிறார்கள் .

இந்த நாட்டின் முஸ்லிம்களை அடக்கி வைக்கவேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடுகள்தான் இந்த சிறிய குழுக்களின் குற்றச்சாட்டுக்கள். ஆகவே அந்த குற்றசாட்டுக்கள் உண்மையானைவையா? பொய்யானைவையா என்பது அவர்களுக்கே தேவையில்லாத ஒன்று பெளத்த தேசம் பெளத்த அரசு என்ற நோக்குடன் முஸ்லிம்கள் மீதான காழ்புணர்ச்சியுடன் கூடிய மோலாதிக்க சிந்தனை சமத்துவ உரிமையை மறுக்கும் ஆழ முற்படும் தாகம் என்பதன் பின்புலத்தில் குற்றசாட்டுக்கள் எழுப்பபடுகிறது. ஆகவே அவர்களுக்கு விளக்கங்களை வழங்கி அவர்களின் செயல்பாடுகளை முடிவுக்கு கொண்டுவரலாம் என கருத முடியாது. எமது விளக்கங்கள் அவர்களின் பிடிவாதத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரும் என்றும் கருத முடியாது . ஆகவே அவர்களால் முன்வைக்கப் படும் குற்றச் சாட்டுக்களுக்கு அவர்களுக்கு விளக்கம் வழங்கி அவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது . அவர்களை விவாதங்களில் நேரடியாக சந்திப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் அதுதான் பயன்தரும் .

இந்த பெளத்த மேலாதிக்கக் சிந்தனை அரசியல் பரிமாணம் பெற்றுவருவதக்கு பிரதான காரணங்களில் ஒன்றாக பிராந்திய அரசியலில் உள்ளது . தமது நாட்டின் நலனை மையமாக கொண்ட , பிராந்திய வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டி முதன்மை பெறுகிறது .இந்த ஆதிக்கப் போட்டி பெளத்த கடும்போக்குவாதத்தை ஓர் ஆயுதமாக பயன்படுத்தி பிராந்தியத்தில் அரசியல், பொருளாதார, இராணுவ, நலன்கருதிய நகர்வுகளை மேற்கொள்ள முயற்சிகள் இடம்பெறுகிறது அதில் ஒரு அங்கம்தான் இலங்கையிலும் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் என்பதாகு சாதகமான பல நிகழ்வுகளை குறிப்பிட முடியும்.

பல்லின சமூகங்கள் வாழும் இலங்கையின் இன மத ஒற்றுமையை சீனா, இந்தியா பிராந்திய போட்டியே தீர்மானித்துள்ளது. என்பது வரலாறு. பல கட்டங்களில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவு முறுகல் நிலையில் இருந்து வந்துள்ளதும் கடந்த 50 ஆண்டுகால வரலாற்றில் இது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது . இலங்கை இந்தியாவுடன் முரண்படும்போது அல்லது இந்தியாவின் ஆதிக்கத்தில் இருந்து நகர்ந்து செல்ல முற்படும்போதும் இந்தியா இலங்கைக்கு எதிராக மிகவும் பாதகமான சதிவேலைகளை செய்துவந்துள்ளது அதேவேளை தற்போது புலிகளின் அழிவுக்கு பின்னர் இலங்கை ரஷியா, சீனா சார்பான போக்கை ‘இரகசியமாக விசுவாசமாக’ பேணிவருவதாக இந்தியாவின் உளவுத் துறை நம்புகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது பிராந்திய அரசியல் சம்பந்தமான முஸ்லிம் சமூகத்தின் அரசியல் போக்கு தொடர்பில் ஆராயப் படவேண்டி இருந்தாலும் அதை விடுத்து தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பெளத்த கடும்போக்குவாத்தை எப்படி எதிர்கொள்வது அதன் அபத்தங்களில் இருந்து பாதுகாப்பு பெறுவது பற்றி பார்ப்போம்.

நாம் என்ன செய்யலாம்?

1. தூய்மையான பௌத்த எழுச்சிக்கும் கடும்போக்கு தீவிரவாதத்துக்கும் இடையிலான வித்தியாசத்தை உணர்ந்து கொள்ளல்

இலங்கையில் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் ஒரு மத எழுச்சி ஏற்பட்டு வருவதை நாம் நிதானமாக நோக்கவேண்டும் . இலங்கையில் பெளத்த மத எழுச்சியை இரண்டு வகையாக பிரித்து அறிவதுடன் மக்களுக்கு அதை பிரித்தும் காட்டவேண்டும் ஒன்று கடும்போக்கு பெளத்த தீவிரவாதம் மற்றது சுமூகமான பெளத்த மத எழுச்சி இந்த இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை சரியாக எழுச்சிக்கு உட்படும் இலங்கை சராசரி பௌத்தர்கள் புரிந்து கொள்ள வில்லை. பௌத்தத்தின் பெயரில் சொல்லபடும் எல்லாவற்றையும் பெளத்த எழுச்சியாகவே பார்க்கும் மனநிலையில் எழுச்சிக்கு உட்படும் சராசரி பௌத்தர்கள் உள்ளனர். (எழுச்சிக்கு உட்படாத சாதார பாரம்பரிய பௌத்தர்கள் பற்றி நாம் இங்கு பார்க்க வில்லை) இது இலங்கை சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரதான சவால் இதன் காரணமாக பெளத்த கடும்போக்கு அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக முன்வைக்கும் குற்றசாட்டுக்களையும் பெளத்த எழுச்சியின் அங்கமாக பார்க்கப்படும் ஆபத்தான அறியாமை சூழல் உள்ளது.

இன்று நாட்டில் பெளத்த மத எழுச்சி என்பது கடும்போக்கு பெளத்த மோலாதிக்க சிந்தனை, இனத் துவேசம் மற்ற மதங்கள் மீதான காழ்புணர்ச்சி ஆகியவற்றை சில பெளத்த ஆன்மீக சிந்தனை ஆகியவை கலந்ததாக பார்க்கப் படுகிறது அல்லது அந்த நிலை சில அரசியல் உயர் தரப்பினால் சகித்து ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தூய்மையான பெளத்த எழுச்சிக்கும் கடும்போக்கும் இடையிலான வித்தியாசத்தை சரியாக புரிந்துகொள்ளும் மனநிலை இன்னும் சராசரி பௌத்தர்களுக்கு ஏற்படவில்லை. அதை ஏற்படுத்தும் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் .முஸ்லிம்களால் நடாத்தப் படும் ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சி வானொலி சிங்கள் ,ஆங்கில பத்திரிகை என்பன இல்லாமையால் இவற்றை இலகுவில் செய்துவிட முடியாத நிலையுள்ளது . ஏனினும் ஆங்கில சிங்கள பத்திரிகைகள் மூலமாக இது தொடர்பான அறிவூட்டும் ஆக்ககங்கள் தொடராக வெளியிடப் படுவது ஓரளவு தாக்கமுள்ளதாக அமையும்.

2. நாம் கைகொள்ள வேண்டிய அரசியல் அணுகுமுறைகள்

முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான நடவடிக்கைகளை அரசியல் இராஜதந்திர அணுகுமுறையின் ஊடாக எதிர்கொள்வதற்கு கூட்டு முயற்சி மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது. முதலில் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் ஒரு அணியாகவும் இரண்டாம் நிலையில் அனைத்து தரப்பு முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒரு அணியாகவும் செயல்படும் கூட்டு அணுகுமுறை முறையொன்று நடைமுறைக்கு வரவேண்டும் . இதில் முதல் கட்ட அணுகுமுறை ஓரளவு நடைமுறையில் உள்ளது. எனினும் ஆளும் தரப்பில் இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூக நலனை முன்னிறுத்தி கட்சி நலன்களை பின்தள்ளி செயல்படும்போதுதான் இது வெற்றிபெறும் .அரசியல் அணுகுமுறையின் ஊடாக பெளத்த கடும்போக்குவாதிகளுக்கு முஸ்லிம் சமூகம் தொடர்பில் பதிலளிக்கும் சிங்கள பெளத்த அரசியல்வாதிகளை உருவாக்கவேண்டும், இதை முதலில் ஆளும் தரப்பு மட்டத்தில் செயல்படுத்த வேண்டும். அதற்கு முதலில் இனங்காணப்படும் சிங்கள பெளத்த அரசியல்வாதிகளை அணுகி அவர்களுக்கு முஸ்லிம் தரப்பு நியாயங்கள் தெளிவு படுத்தப் படவேண்டும் குற்றசாட்டுக்களில் உண்மைநிலைமை சான்றுகளுடன் முன்வைக்கப் வேண்டும். முன்வைக்கப் படும் நியாயபூர்வமான விளக்கங்கள் தேவையான போது அவர்களை பேசத் தூண்டுவதாக இருக்க வேண்டும். இது சரியாக செய்யபட்டால் பெரிதும் சாதகமான விளைவுகளை தரும் .

உதாரணமாக அண்மையில் அளுத்கமையில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலைகளைக் கண்டித்து பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த முக்கிய பல அரசியல்வாதிகளம் தமது எதிர்ப்புக்களையும் கண்டனங்களையும் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக!
முஸ்லிம்களுக்கு விடுக்கப் படுகின்ற சவால்களின் பின்னணியில் வெளிநாட்டு உளவுச் சக்திகள் தொழிற்படுகின்றன, உள்நாட்டு காடையர் கூட்டமொன்று மதத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் பணம் சம்பாதிக்க அவர்களுக்குப் பின்னால் அரசியல் இலாபம் தேடும் செல்வாக்கு மிக்க சதிகாரர்கள் தொழிற்படுகிறார்கள், ஒரு இனத்தை இலக்கு வைத்து செய்யப் படுகின்ற விஷமப் பிரச்சாரங்களை ஆர்ப்பாட்டங்களை ஜனநாயக உரிமையென அங்கீகாரம் அளிக்கும் சக்திகள் இந்த நாட்டை பாரிய அழிவுப் பாதையில் இட்டுச் செல்வதோடு தமது சொந்த அரசியல் எதிர்காலத்தையும் தொலைத்துக் கொள்ளவே துணிந்திருப்பதாக தெரிகிறது.

எல்லை கடந்து செல்லும் பொது பல சேனா அமைப்பின் நடவடிக்கைகளை அரசு கட்டுப்பாட்டிற்குள் உடனடியாக கொண்டு வரல் வேண்டும் இன்றேல் அவற்றிற்கு பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு அரசையே சாரும். அரச கூட்டணியில் உள்ள சகல முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் உடனடியாக ஜனாதிபதியிடம் தமது பலத்த ஆட்சேபனையை தெரிவிக்க வேண்டும்! இன்றேல் இந்த விவகாரத்தை சர்வதேச சமூகத்திற்கும் முஸ்லிம் உலகிற்கும் கொண்டு செல்லக் கூடிய அதிரடி அரசியல் இராஜ தந்திர நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் பல்வேறு பெரும்பான்மை தேசிய அரசியல் சக்திகள் முஸ்லிம்களுக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளதோடு சில நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர், அவர்களோடு புரிந்துணர்வுடன் செயற்படுவதன் மூலமே இந்த தீய சக்திகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலை முறியடிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *