Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » சாபத்திற்கு அழிக்கும் சக்தி உண்டா ?

சாபத்திற்கு அழிக்கும் சக்தி உண்டா ?

– மௌலவி யூனுஸ் தப்ரீஸ் ( சத்தியக் குரல் ஆசிரியர் இலங்கை )

ஒரு மனிதன் இன்னொரு மனிதனையோ, அல்லது மிருகத்தையோ சபித்தால் அது பலிக்குமா ? இதை நம்பலாமா ? ஏன் என்றால் இன்று சிலரால் எந்த தொடுகையுமில்லாமல் இன்னொரு மனிதனுக்கு எந்த தீங்கும் செய்ய முடியாது, என்று கூறி அந்த செய்திகள் ஹதீஸ்களில் வந்தாலும், அந்த ஹதீஸ்கள் ஸஹீஹாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசி வருவதை காணலாம்? ஒரு மனிதனுக்கு தீங்கை எற்படுத்த வேண்டுமானால் எந்த தொடுகையும் இல்லாமல் செய்ய முடியாது என்ற வரிசையில் சூனியமும், கண்ணூரும் பொய் என்று வாதாடி வருகிறார்கள். இது இவர்களின் அறியாமையாகும்.

அந்த வரிசையில் சாபத்தைப் பற்றி குர்ஆனிலும், ஹதீஸிலும் நிறையவே சொல்லப் பட்டிருப்பதை காணலாம். சில நேரம் இதையும் மறுத்தாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை. !

சாபம் சம்பந்தமான குர்ஆன் வசனத்தையும், சில ஹதீஸ்களையும் கவனிப்போம். ஒரு மனிதன் தன் மனைவியின் மீது விபச்சாரக் குற்றம் சுமத்தினால், அதற்கான நான்கு சாட்சிகள் இல்லா விட்டால் சத்தியம் செய்ய வேண்டும். அதாவது அவர் பொய் சொல்கிறார் என்று நான்கு தடவையும், ஐந்தாவது தடவை அவர் உண்மை கூறினால் அல்லாஹ்வின் சாபம் என் மீது உண்டாகட்டும் என்று மனைவி கூறுவாள். இப்படி மாறி மாறி கூற வேண்டும் என்பதை (24 : 06) ம் வசனத்தில் காணலாம்.

இது ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு எந்த தொடுகையும் இல்லாமல் அழிவை ஏற்படுத்துவதாகும். அதே போல

“அறிந்துக் கொள்ளுங்கள் இந்த அநியாயக்கார்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். ( 11 :18 ) ( 07 : 44 )

மேலும் சில நபி மொழிகளை அவதானிப்போம். ஹதீஸ்ளை சுருக்கமாக தருகிறோம்.

ஒரு முஃமினை சபிப்பது, அவரை கொலை செய்வது போலாகும். (புகாரி 6044, முஸ்லிம் 110 )

தங்களுடைய நபிமார்களின் மண்ணரைகளை வணங்குமிடமாக எடுத்துக் கொண்ட யூதர்களை அல்லாஹ் சபிப்பானாக ! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். வட்டியை சாப்பிடுவோரை அல்லாஹ் சபித்து விட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் சவுரி (ஒட்டு) முடி வைக்கும் பெண்ணையும், வாங்கும் பெண்ணையும், அல்லாஹ் சபித்து விட்டான். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் “ ஒரு பயணத்தில் அன்சாரி பெண் ஒருவர் ஒட்டகத்தில் வந்துக் கொண்டிருந்தார். அந்த பெண் சடைவடைந்து அந்த ஒட்டகத்தை சபித்தார். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அந்த ஒட்டகத்தின் மீதுள்ள பொருட்களை எடுங்கள் அதைத் தனியே விடுங்கள். ஏனெனில் அது சபிக்கப்பட்டுவிட்டது, என்று கூறினார்கள். சமீபத்தில் கூட அதை நான் பார்த்தது போல உள்ளது, அது மக்களை சுற்றி வரும் அதை எவரும் பயன் படுத்தவில்லை. என இம்ரான் இப்னு ஹீசைன் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ( முஸ்லிம் 2595 )

எந்த தொடுகையுமில்லாமல் சாபம் என்ற ஒரு வார்த்தையால் ஒட்டகம் பாதிக்கப் பட்டுள்ளது. ? எனவே சாபத்திற்கு அழிக்கும் சக்தி உண்டு என்பதை குர்ஆனும் ஹதீஸீம் உறுதிப் படுத்துவதைக் காணலாம்.

இந்த இடத்தில் ஒருமுக்கியமான விடயத்தை கவனிக்க வேண்டும். சாபம் பலிப்பதாக இருந்தாலும் அல்லாஹ்வுடைய நாட்டம் வேண்டும். சாபம் மட்டும் இல்லை, எதுவாக இருந்தாலும் அல்லாஹ்வுடைய நாட்டம் இல்லாமல் எதுவும் நடக்காது என்பது இஸ்லாத்தின் அடிப்டைக் கொள்கையாகும்.

மாறாக நான் உங்களுக்கு முன் வருகிறேன் ஏலும் என்றால் என் மீது சாபம் செய்து நீரூபித்துக் காட்டுங்கள் அப்போது தான் ஏற்றுக் கொள்வேன் என்போர் இறைவனின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். எப்படி அல்லாஹ் மலக்குகள் மூலம் வேலைகளை செய்கிறானோ, அது போல சில மனிதர் மூலமும் இறைவன் நிறைவேற்றிக் காட்டுகிறான். அறிவுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அணுகினால் ஈமானை இழக்க நேரிடும். ? காலத்திற்கு பொருத்தமில்லை, அறிவுக்குப் பொருந்த வில்லை, நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்று அணுகினால் முஃதஸிலாக்களின் வழியில் வழி தவறி செல்ல நேரிடும். எனவே சூனியமாக இருந்தாலும், கண்ணூராக இருந்தாலும், சாபமாக இருந்தாலும், எந்த தொடுகையுமின்றி, இறை நாட்டத்தால் நடக்கும் என்றால் அதை நாம் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *