Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » தமிழ்நாட்டின் ஃபித்னாக்கள் – தொடர் 5 – TNTJவின் ஞானசூனியங்கள்

தமிழ்நாட்டின் ஃபித்னாக்கள் – தொடர் 5 – TNTJவின் ஞானசூனியங்கள்

அன்வர்தீன், பெரம்பலூர்

ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரித்தல் – TNTJவின் ஞானசூனியங்கள்.    

எந்த ஒரு விவாதகளமாகட்டும், அதிலே NTF & TNTJ கூட்டத்தினர் தனித்தன்மையுடன்? இருக்க வேண்டும் என்பதற்காக குர்ஆன், ஹதீஸிலே பித்தலாட்டங்களை செய்து  எதையாவது உளறி கொட்டிக்கொண்டு இருப்பார்கள். அந்த வகையில், சூனியம் சம்பந்தமான குர்ஆனின் வசனங்களுக்கு சுய விளக்கங்கள் கொடுத்து, ஹதீஸ்களை நிராகரித்து, ஹதீஸ் நிராகரிப்பில் உச்சத்தை அடைந்து இதுவரை யாரும் செய்யாத இனிமேல் யாரும் செய்ய துணியாத  அளவுக்கு மார்க்கத்தில் வரம்பை மீறிய ஒரு வழிகெட்ட கூட்டமாக ஆகிவிட்டார்கள்.

பீஜே தன்னுடைய குர்ஆன் தப்ஸிரில் இதுவரை வந்துள்ள 14 எடிசனில்  சூனியம் சம்பந்தமான (2:102) வசனுத்துக்கு 7 தடவை மொழிபெயர்ப்புகளை மாற்றியுள்ளதிலிருந்து, உண்மையான விளக்கத்தை விட்டுவிட்டு மனோ இச்சைகளை குர்ஆனிலே புகுத்தி குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார் என்பதை அறிவுள்ளவர்கள், விளங்கிக்கொள்வார்கள்.

அன்னை ஆயிஷா (ரலி), அபூஹூரைரா (ரலி), சஹாபாக்கள், உலக அறிஞர்கள் யாராக இருந்தாலும், உலகத்தின் முப்தியாக இருந்தாலும், மக்கா மதீனாவின் இமாம்களாக இருந்தாலும், எழுதுகிற நானும் படிக்கிற நீங்களாக இருந்தாலும் சரியே, வழிகெட்ட கூட்டத்தினரின் பார்வையில், NTF, TNTJ சூனியக்கொள்கையை ஏற்காத இந்த பிரபஞ்சத்தில் வாழ்ந்து மரணித்த, வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய  முஸ்லிம்கள் அனைவரும் இணை வைப்பவர்களே.

பீஜே & Co. அளித்த ஃபத்வாக்கள், அவர்களை ஹவாரிஜிய முஹ்தஸிலா சிந்தனை கொண்டவர் என்று மக்கள் மன்றத்தில் அடையாளம் காட்ட உதவியதால், பீஜேவின் ஜால்ராக்கள் தவிர்த்து, உண்மையான அறிஞர்கள் கூட்டம் இவரை விட்டு விலகியது.

அடிப்படை ஆதாரங்களை விட்டுவிட்டு மனோஇச்சை, பகுத்தறிவு, யூகங்களை மார்க்கத்தில் நுழைத்தால், இஸ்லாத்தின் நம்பிக்கைகளை அது எவ்வாறு வேறுடன் பிடுங்கி எறிந்துவிடும் என்பதற்கு TNTJ கூட்டத்தினர் வாழும் சாட்சியாக இருக்கிறார்கள்.

ஹதீஸை நம்புவதற்கு இவர்கள் கையாளும் முறையை கேட்டால், நம்மை மிஞ்சிவிட்டார்களே என்று ஷைத்தானே புல்லரித்துபோவான்.

தேள் கொட்டியவருக்கு சஹாபாக்கள் சூரத்துல் ஃபாத்திஹா ஓதினார்கள் நிவாரணம் கிடைத்தது என்ற ஸஹீஹான ஹதீஸை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இப்போது போலி ஏகத்துவவாதி ஒருவருக்கு தேள் கொட்டிவிட்டது, சூரத்துல் ஃபத்திஹா ஓதினார்கள் நிவாரணம் கிடைக்கவில்லை, ஆகையால் இந்த ஹதீஸை நிராகரிக்கிறோம் என்று சொன்னால் அவரை எப்படி ஷைத்தானிய வலையில் சிக்கிகொண்டு இருக்கிறார் என்று சொல்வோமோ, அதேபோல் தான் பீஜேயின், எனக்கு யாராவது சூனியம் வைத்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு என்ற உளுத்துப்போன அறிவிப்பும்.

இந்த ஞானசூனியங்களின் சூனிய உளரல்களின் பட்டியல்: (இதற்கான நமது விளக்கமும் தொடர்ந்து பட்டியலிடப்பட்டுள்ளது).

  • சூனியம் என்ற ஒன்றே கிடையாது.
  • குர்ஆனில் இறைவன் குறிப்பிடுவது தந்திரம், மந்திரம், வித்தை போன்றவைகள்.
  • சூனியத்தால் தீங்கிழைக்க முடியாது.
  • சூனியத்தால் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது.
  • கணவன் மனைவிக்கிடையில்…..பாதிப்பை குர்ஆன் கூறுகிறதேப்பா!!!! அது வேற வாய்!!!.
  • இறைவன் உலகத்தில் நடக்கின்ற தீமைகளுக்கு உதவமாட்டான்.
  • இறைவன் சூனியக்காரனுக்கு உதவ மாட்டான்.
  • சூனிய சவால் விட்ட எங்கள் தலைவர் வெற்றி பெற்று விட்டார். ஆகையால் சூனியம் இல்லை.
  • சூனியம் சம்பந்தமான ஹதீஸ்களின் சனதுகளில் குறைபாடுகள் இல்லை.
  • அறிவிப்பாளர்கள் வரிசையில் எந்த பிரச்சனையும் இல்லை.
  • ஆயிஷா (ரலி) குர்ஆனுக்கு மாற்றமாக அறிவிக்கமாட்டார்கள்.
  • ஆனால் ஆயிஷா (ரலி) அவர்களைவிட எங்கள் தலைவர் அறிவில் சிறந்தவர்.
  • ஆகையால் எங்கள் பெரிய அண்ணனின் பகுத்தறிவு ஏற்க மறுக்கிறது.
  • ஒரு யூதன் நபி அவர்களுக்கு சூனியம் வைப்பதை எப்படி நம்புவது?
  • சூனியம் சம்பந்தமான ஹதீஸ்களில் வார்த்தை குளருபடிகள் இருக்கின்றன.
  • ஆகையால் அனைத்து சூனிய ஹதீஸ்களும் இட்டுக் கட்டப்பட்டவைகள் etc….
  • இதற்கு மாற்றமாக நம்பும் அனைத்து முஸ்லிம்களும் இணைவைப்பவர்கள்.

மேலே கண்ட உளரல்கள் இறை நிராகரிப்பாளர்களின் நிலைபாடு அல்ல. அல்லாஹ்வை ஈமான் கொண்ட ஏகத்துவத்தை குத்தகைக்கு எடுத்துக்கொண்டதாக மனப்பால் குடித்துக் கொண்டு இருப்பவர்களின் நிலைபாடு.

திருகுர்ஆனின் பார்வையில் இவர்களின் தில்லுமுல்லுகளை ஒவ்வொன்றாக தோலுரிப்போம்.

திருகுர்ஆனின் 2:102 வசனம் மற்றும் பல ஸஹீஹான ஹதீஸின் (2766,3175,3268,5763 புஹாரி) அடிப்படையிலும், சூனியம் என்ற ஒரு கலை உண்டு, அதை கற்பது பிறருக்கு கற்றுக்கொடுப்பது சூனியம் செய்வது, சூனியக்காரனிடம் செல்வது இறை நிராகரிப்பு, அல்லாஹ் நாடினால் அதன் மூலம் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று ஒரு முஃமின் நம்பவேண்டும். இதற்கு மாற்றமாக சுய விளக்கம் கொடுப்பவர்கள், குர்ஆன், ஹதீஸை மறுத்தவர்கள் பட்டியலில் சேர்ந்து விடுவார்கள்.

இந்த அடிப்படையில் இவர்கள் முதலில் கையில் எடுத்த ஆயுதம் சூனியமே இல்லை என்பதுதான். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்களே, இதுதான் அவர்கள் விஷயத்தில் நடந்தது.

அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்  குர்ஆன் (2:102)

இல்லாத ஒரு கலையையா கற்றுக்கொடுத்தார்கள், சூனியம் இருப்பதால் தான் அதை கற்றுக்கொடுத்தார்கள் என்ற குர்ஆன் ஆதாரத்தை போட்டவுடன், வழக்கம்போல் ‘சூனியம் இல்லை ஆனால் இருக்கிறது’ என்று உளற ஆரம்பித்தார்கள்.

அடுத்ததாக சூனியத்தால் தீங்கிழைக்க முடியாது என்ற அம்பை விட்டுபார்த்தார்கள்.

தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே கற்றுக் கொண்டார்கள். குர்ஆன் (2:102)

இறைவன் குர்ஆனில் சூனியத்தால் தீங்கிழைக்க முடியும் என்று சொல்கிறானே என்ற ஆதாரம் அவர்களுக்கு சேதாரமாக ஆகிவிட்டபிறகு, என்னப்பா எந்த பந்து போட்டாலும் கோல் போடுகிறார்களே என்ற ஆதங்கத்தில், எல்லாம் சரிதான் ஆனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற பொய்யை அவிழ்த்து விட்டார்கள்.

கணவன் மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள்  குர்ஆன் (2:102)

கணவன் மனைவியிடையே பாதிப்பை ஏற்படுத்தும் என்று இறைவனே சொல்லிவிட்டானே. ஏதாவது பதில் உண்டா என்று கேட்டால், இந்த ஞானசூனியங்கள் தங்களுடைய முஃதஸிலா சிந்தனைக்கு முட்டுக்கொடுக்க, தீமைகளுக்கு அல்லாஹ் உதவமாட்டான் என்று கம்பை சுழற்றி விட்டு பார்த்தார்கள்.

குர்ஆனின் அடிப்படையில், பூலோகத்தில் நடைபெறுகிற வறுமை, பட்டினிச் சாவுகள், சுரண்டல்கள், நோய்கள், கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, பாலியல் துன்புறுத்தல்கள், போன்ற அனைத்து தீமைகளும் அல்லாஹ்விடமிருந்து, அல்லாஹ் நாடினால்தான் நடைபெறும் என்பதுதான் ஒரு முஸ்லிமின் அடிப்படை நம்பிக்கையாக இருக்க வேண்டும் என்ற ஆதாரம் அவர்களின் மூளையை மழுங்கடித்து விட்டது, சூனியத்திற்கு மட்டும் விதிவிலக்காக அல்லாஹ் உதவ மாட்டான் என்ற பொய்யை விட்டுபார்த்தார்கள்.

அல்லாஹ்வின் அனுமதியின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது  குர்ஆன் (2:102)

எந்த ஒரு தீமையும் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை; (64:11) 

அல்லாஹ் நாடினால் சூனியத்தின்மூலம் தீங்கிழைக்க முடியும் என்ற ஆதாரம் அவர்களை கடைசியாக மன்னை கவ்வவைத்தது.  ஏதாவது செய்தாக வேண்டுமே என்று செய்வதறியாது நின்றவர்களுக்கு, தங்களுடைய கூடாரம் காலியாகாமல் இருக்க வேண்டுமானால் வழக்கம்போல் சூனியம் சம்பதமான அனைத்து ஹதீஸ்களையும் நிராகரிக்கிறோம் என்று கொஞ்சம் கூட இறை அச்சம் இல்லாமல் உளர ஆரம்பித்தார்கள்.  நஊதுபில்லாஹ்….

ஹதீஸை செயல்முறை சோதனை (practical) செய்து பார்ப்பார்கள். சரிப்பட்டு வரவில்லை என்றால் அவரின் பக்தகோடிகள் ஆட்டத்தை ஆரம்பித்துவிடுவார்கள். அந்த அடிப்படையில் பீஜேவுக்கு சூனியம் செய்ய அஹோரியை நியமித்தார்கள். சூனியம் தோற்றுப்போய் விட்டது, ஆகையால் சூனியம் இல்லை, சூனியம் சம்பந்தமான அனைத்து ஹதீஸ்களையும் நிராகரித்து விட்டார்கள்.

நவீன குழப்பவாதிகளுக்கு சூனியத்தை பொய்யென அறிவிக்க வேண்டும். ஆனால் அல்லாஹ்வை ஈமான் கொண்டவர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். குர்ஆன்/ஹதீஸை நிராகரிக்க முடியாது. அதனால் சூனியம் என்றால் மேஜிக், தந்திரம், வித்தை, மீடியம் இல்லாமல் செய்வது என்று பொருள் கூறி அல்லாஹ்வை மோடி மஸ்தானாக மாற்றிவிட்டார்கள். குர்ஆன், ஹதீஸின் அடிப்படையில் நிரூபிப்பதை தவிர்த்துவிட்டு, பகுத்தறிவின் அடிப்படையில் நிரூபிப்பதாக நினைத்துக் கொண்டு சூனியம், ஃபிரஅவ்ன், ஷிர்க், மூஸா, சூனியக்காரர்கள், ஸாமிரி, தஜ்ஜால், மீடியம் என்று எங்கெங்கோ சுற்றி, எதையெதையோ மறுத்து, ஆஹா முஸ்லிம்களின் காதுகளில் பூந்தோட்டத்தையே சுற்றிவிட முயற்சித்தனர்.

சூனியம் சம்பந்தமான ஹதீஸை ஆயிஷா (ரலி) ஒரே ஒருவர் மட்டும் அறிவிப்பதால் இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உதார் விட்டு பார்த்தார்கள். செயல்கள் அனைத்தும் எண்ணங்கள் அடிப்படையில் என்ற ஹதீஸை உமர் (ரலி) அவர்கள் மட்டுமே அறிவிக்கிறார்களே என்று கேட்டால் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள்.

சூனியம் சம்பந்தமான ஹதீஸ், சூனியக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள் என்ற குர்ஆன் வசனத்துக்கு முரணாக உள்ளது என்று அடுத்த பொய்யை அறங்கேற்றினார்கள். இந்த குர்ஆன் வசனத்துக்கும், சூனிய ஹதீஸை மறுப்பதற்கும் கொஞ்சமும் சம்பந்தமே இல்லை. சூனியம் கற்றுக்கொள்வதோ/செய்வதோ இறைவனின் பார்வையில் குஃப்ர். எப்போது ஒருவர் இந்த காரியத்தை செய்ய ஆரம்பித்தாரோ அப்போதே அவர் இறைநிராகரிப்பாளர் ஆகிவிட்டார். இறை நிராகரிப்பாளரான சூனியக்காரன் வெற்றி பெறமாட்டான் என்ற புரிந்து கொண்டால் ஹதீஸை மறுக்கத்தேவை இல்லை. என்ன செய்வது பகுத்தறிவு மறுக்கச்சொல்லி தூண்டுகிறதே.

குர்ஆனையும், ஹதீஸையும் நம்புவதற்கு பதில், ஒரு பொய்யை மறைப்பதற்கு பல பொய்களை அறங்கேற்ற வேண்டும் என்ற கோயபல்ஸ் தத்துவத்தை நம்பி, தங்களுடைய வரட்டு வாதங்களை நிறுவுவதற்கு, பொய்களுக்கு மேல் பொய்களை அவிழ்த்துவிட்டு சப்த நாடியும் அடங்கி ஒடுங்கி, இறுதியாக இந்த போலி ஏகத்துவவாதிகள் தங்களிடையே பல பிரிவுகளாக பிரிந்து ஊழல், பாலியல் போன்ற ஷைத்தானின் குட்டையில் மூழ்கி, பேரியக்கம் என்று பீற்றிக்கொண்டு இருந்தவர்கள் இருக்கிற இடம் தெரியாமல் ஆகிவிட்டார்கள்.

லபீத் பின் அஃஜம் என்ற யூதனா அல்லாஹ்வின் தூதருக்கு சூனியம் வைத்தான்? என்று அல்லக்கைகளை ஆச்சரியப்பட வைத்தார்கள். ஹதீஸை நிராகரிப்பதற்கு வைக்கும் அளவுகோலை பாருங்கள். இவர்கள் வாதப்படி ஒரு ஹதீஸை மறுப்பதற்கு யூதன் என்ற அளவுகோலை வைத்தால், யூதப்பெண் அல்லாஹ்வின் தூதருக்கு இறைச்சியில் விஷத்தை வைத்து கொடுத்த ஹதீஸையும், மற்றும் யூதர்கள் சம்பந்தமான அனைத்து ஹதீஸ்களையும் மறுக்க வேண்டுமே.   

TNTJ, NTF கூட்டத்தினர், ஏனைய முஸ்லிம் சமுதாயத்தினரைவிட குர்ஆன் ஹதீஸில் ஞானம் குறைந்தவர்கள் என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். நல்ல கத்தரிக்காய் வாங்குவதற்கு நாலு கடைகள் ஏறி இறங்குகிறோம், ஒரு விஷயத்தை ஆழமாக புரிந்து கொள்வதற்கு பல அறிஞர்களின் கருத்துக்களை கேட்கிறோம். உங்களுக்கு தெரியவில்லை எனில் அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று இறைவன் திருமறையில் கூறுகிறான்.

குர்ஆனின் அறிவுரைகள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகிவிட்ட அறிவுஜீவிகள்??? குதிரைக்கு லகான் போட்டதுபோல TNTJவினரின்  பயானை தவிர வேறு யாருடைய பயானையும் கேட்க மாட்டார்கள். அப்படி கேட்டுவிட்டால் உண்மையை விளங்கிகொள்வார்கள் என்பதால் கேட்கக்கூடாது என்று தலைமை கட்டளை போட்டு இருக்கிறது. இதுதான் இவர்கள் உண்மையான மார்க்கத்தை விளங்க மறுப்பதற்கு முக்கிய காரணம். கத்தரிக்காய்க்கு கொடுக்கும் மதிப்பைகூட இவர்கள் மார்க்கத்திற்கு கொடுப்பதில்லை என்பதுதான் நிதர்சனம்.

எப்படி இவர்கள் ஹதீஸை இட்டுக்கட்டிவிட்டு, ஸஹீஹான ஹதீஸ்களை இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்று கூறினார்கள் என்று பார்ப்போம்.

                                                                                                                                           தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *